Skip to main content

“இந்த பணம் எனக்கு மட்டும் அல்ல, மற்ற அதிகாரிகளுக்கும்...” - கறாராக லஞ்சம் கேட்டவர் கைது!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

This money is not only for me, but also for other officials

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது நைனார்பாளையம். அங்குள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்துவருபவர் கிருஷ்ணன் மகன் ஜெயராமன் (36). இவர், தனது தந்தை பெயரில் இருந்த நிலத்தை தன் சகோதரர்கள் மூவருடன் பாகப்பிரிவினை செய்துகொண்டார். இதையடுத்து, மூவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் மூலம் பாகப்பிரிவினையைப் பதிவும் செய்துகொண்டனர். இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை பத்திரத்தின்படி நிலத்தை தங்கள் மூவரது பெயருக்கும் பட்டா மாற்றம் செய்து தருமாறு ஜெயராமனும் அவரது சகோதரர்களும் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தனர்.

 

ஆனால் முறைப்படி நிலத்தை அளவு செய்துகொடுக்க வேண்டிய நில அளவையர் யாரும் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வரவில்லை. அதனால் கடந்த 15ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று விவரம் கேட்டுள்ளார் ஜெயராமன். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் நில அளவையர் சூர்யா என்ற பெண்மணியைப் பாருங்கள் என்று கூறியுள்ளனர். அதன்படி சர்வேயர் சூர்யாவை சென்று பார்த்துள்ளார் ஜெயராமன். அப்போது பட்டா மாற்றம் செய்வதற்கு இணைய வழியில் விண்ணப்பித்ததற்கான ரசீதையும் காட்டியுள்ளார்.

 

அதை எல்லாம் சரி பார்த்த சூர்யா, உங்கள் சகோதரர்கள் மூன்று பேரும் தலா 8000 ரூபாய் வீதம் மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் நிலத்தை அளவு செய்து பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார் சூர்யா. நில அளவை செய்து பட்டா மாற்றம் செய்ய இவ்வளவு தொகையா? என ஜெயராமன் கேட்டபோது, இந்தப் பணம் எனக்கு மட்டும் அல்ல. மற்ற அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சூர்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜெயராமன் அதற்கான பணத்தை ஏற்பாடு செய்துகொண்டு வருவதாகக் கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார். தங்களுக்குரிய நிலத்தைப் பட்டா மாற்றம் செய்துகொடுக்க வேண்டியது வருவாய்த்துறையினரின் கடமை. அப்படியிருக்கும்போது 24 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் தர வேண்டும் என கறாராக கேட்டதை ஜெயராமனாலும் அவரது சகோதரர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள காவல்துறை ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் சென்று புகார் அளித்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி நேற்று (24.11.2021) மாலை 6 மணியளவில் சூர்யா மற்றும் அப்பகுதி கிராம உதவியாளர் சுசீலா ஆகியோரை ஜெயராமன் சந்தித்தார். அப்போது ரசாயன பவுடர் தடவிய பணத்தை ஜெயராமன் அவர்களிடம் கொடுத்தபோது, உடன் சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து நில அளவையர் சூர்யா, உதவியாளர் சுசீலா ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். பட்டா மாற்றம் செய்ய பெண் நில அளவையர், கிராம உதவியாளர் இருவரும் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.