Skip to main content

கரோனா நிவாரண நிதி அளித்த சிறுமிக்கு எம்.எல்.ஏ கொடுத்த சர்ப்ரைஸ்!!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
The girl who donated the corona relief fund; Chief Secretary who sent the letter, the MLA who bought the laptop

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர்களிடம் உயிர் காக்கும் பணிக்கு நிதி உதவி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக பல்வேறு தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள், வியாபாரிகள் எனப் பல தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கதனேசன், தமிழ்செல்வி தம்பதியரின் 10 வயது மகள் சிந்துஜா, உண்டியலில் தான் சேமித்துவைத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். அனிச்சம்பாளையம் அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு முடித்துள்ள சிந்துஜா, சிறுவயதிலிருந்தே உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். 

 

இந்த நிலையில் சிந்துஜா கொஞ்சம் கொஞ்சமாகத் தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 1677 ரூபாயைக் காசோலையாக எடுத்து  முதல்வரின் நிவாரண நிதிக்குக் கடந்த 9ஆம் தேதி அனுப்பி வைத்திருந்தார். இதை அறிந்த தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு, சிந்துஜாவின் இந்த செயலை பாராட்டி அவரது தந்தைக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில், "முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய மாணவி சிந்துஜாவைப் பாராட்டுகிறேன், அவர் மேன்மேலும் படித்து தன் வாழ்நாளில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

 

சிறுமியின் இந்த செயலை அறிந்த விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணன் சிறுமி சிந்துஜா மற்றும் அவரது பெற்றோரை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து தனது சொந்த பணத்தில் லேப்டாப் ஒன்றை வாங்கி, அதை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிறுமியிடம் கொடுத்துப் பாராட்டியுள்ளார். அப்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், சிறுமி சிந்துஜாவுக்கு மீண்டும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு உண்டியலைப் பரிசாக வழங்கியுள்ளார். அவர்களுடன் விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்ரமனியன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறுமிக்குப் பாராட்டு தெரிவித்தனர். சிறுமி சிந்துஜா, தான் சிறுக சிறுக சேமிக்கும் பணத்தில், படிப்பதற்காக லேப்டாப் வாங்க வேண்டும் என எண்ணியிருந்த சிறுமி, லேப்டாப் வாங்கும் கனவைக் கைவிட்டு முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது விருப்பத்தைத் தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் நிறைவேற்றியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.