தமிழகத்தில் இன்று புதிதாக 3,680 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரே நாளில் கண்டறியப்படும் கரோனா மொத்த பாதிப்பு என்பது நான்காவது நாளாக நான்காயிரத்திற்கும்கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு என்பது 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. ஏழாவது நாளாக சென்னையில் இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரேநாளில் 1,205 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 82,324 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரைவிட, குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் 64 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 47 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 17 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை என்பது 1,829 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் 41 ஆவது நாளாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.
பிற மாவட்டங்களிலும் இன்று ஒரே நாளில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 2,475 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 35,921 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3,680 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வயது ஏழு மாத ஆண் குழந்தை இன்று கரோனாவுக்கு உயிரிழந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தற்பொழுது 46,105 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மற்றும் இன்று ஒரே நாளில் 27 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் இதுவரை அதிகபட்சமாக 1,196 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.