Skip to main content

மக்கள் நலனுக்காக அரசுப்பணியை உதறியவர்! தியாகி ஆர்.வேலுச்சாமிதேவர்...

Published on 23/08/2021 | Edited on 23/08/2021
 R. Veluchamidevar

 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் பூதலபுரம் கிராமத்தில் இராமசாமித் தேவர்-உமையம்மாள் தம்பதியருக்கு 21-08-1911 ஆம் ஆண்டு மூத்த மகனாய் பிறந்தவர் ஆர்.வேலுச்சாமித்தேவர். தனது மாணவப் பருவத்திலேயே அரசியல், மக்கள் இயக்கம், மக்கள் நற்பணி ஆகியவற்றில் தனது  வீரத்தையும், கொள்கை தெளிவையும், மண்வாசனையையும் வெளிப்படுத்தினார். தான் பிறந்த ஊரான பூதலபுரத்தில் கல்வி கற்க பள்ளிக்கூட வசதி இல்லாததால், பக்கத்து கிராமமான சின்னய்யபுரத்தில் கிருத்துவ சபையினரால் நடத்தப்பட்ட சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் கல்வி கற்றார். அந்தக் காலத்தில் ஊர் விட்டு ஊர் செல்ல பேருந்து வசதி இல்லை. அதனால் மாட்டுவண்டியில் பயணம் செய்தே தினசரி பள்ளிக்குப் போய் வந்தார்.

 

பின்னர் ஆறாம் வகுப்பில் சேர்வதற்கு கிருத்துவ போதகர் அவரை மதுரை யூனியன் கிருத்துவ பள்ளியில் சேர்த்தார். மாணவப் பருவத்திலேயே அவரின் ஆர்வம் அரசியல் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. 1927ஆம் ஆண்டு காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்தார். அவருடைய வருகை மதுரை மாவட்டத்திலேயே மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த எழுச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டார். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்து முடித்ததும்  சிவகங்கை பழயனூரில் பிர்கா அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்த காலகட்டத்தில் அவர் காங்கிரஸ் இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்தார். காங்கிரஸ் இயக்க நடவடிக்கைகளில் தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்டார். இந்நிலையில் மக்கள் வரிப்பணம் கட்டவில்லை என்பதற்காக அவர்களது வண்டி மாடுகள், சட்டி பானைகள் ஜப்தி செய்யப்பட்டன.

 

கதவுகள் மற்றும் ஜன்னல்களைக் கூட விட்டு வைக்கவில்லை. வருவாய் அலுவலராக இருந்த அவருக்கு அந்த நடவடிக்கை மனதை உறுத்தின. தனது வேலையின் மீது வெறுப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக வேலையைத் துறந்து விட்டு சொந்த ஊரான பூதலபுரம் வந்து சேர்ந்தார். 1937ஆம் ஆண்டு நாகலாபுரத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. தென்னாட்டுச் சிங்கம் என்று வர்ணிக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அந்த மாநாட்டை தலைமை ஏற்று நடத்தினார். அவர் தனது தலைமையுரையில் யுத்த நிதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களுக்கு உணர்ச்சியூட்டினார். இந்த மாநாடு வெற்றி பெற ஆர்.வேலுச்சாமித் தேவர் தீவிரமாக பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற உரையுடன் தொடங்கியது. நாட்டில் வன்முறைகள் தலை காட்டியது. இந்தக் கால கட்டத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு, பலரும் சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டனர்.

 

 R. Veluchamidevar

 

இந்த வழக்கில் ஆர்.வேலுச்சாமித்தேவரையும் விட்டு வைக்கவில்லை. கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். வேனில் ஏறும் முன் அவரது தாயார் ‘ஜெயம் பெற்று வாடா மகனே’ என்று வாழ்த்தி அனுப்பினார். தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன் சிறையில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள் நூறு வயதைக் கடந்தும் இன்றும் நம்மோடு இயக்கப்பணியாற்றி வரும் தோழர் என்.சங்கரய்யா, ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பின் நாளில் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன், மதுரை வழக்கறிஞர் வைத்தியநாதன் மற்றும் பின் நாளில் தமிழக தலைமைச் செயலாளராக பணியாற்றிய கா.திரவியம் ஆகியோர் முக்கியமானவர்கள். 1942 முதல் 1944 வரை தஞ்சையில் இருந்தார். 1944ஆம் ஆண்டு இறுதியில் தஞ்சை சிறையில் இருந்து விடுதலை ஆனார். சிறையில் இருந்த நாட்களில் கம்யூனிஸ்ட்களின் தொடர்பால் அவர்களோடு உரையாடியும், அவர்கள் தந்த புத்தகங்களைப் படித்தும் கம்யூனிஸ்டாக  சிறையில் இருந்து வெளியே வந்தார்.

 

அவரது பணியும், திறமையும் அவரை திருநெல்வேலி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராக்கியது. கட்சிப் பணியைச் செய்த வண்ணம் விவசாயச் சங்கம் பணிகளிலும் தீவிரம் காட்டினார். நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் காவலர்கள் நடத்திய தாக்குதல்கள் கடுமையாக இருந்தது. அனைத்தையும் தாங்கி நின்று கட்சிக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்தார். விவசாயச் சங்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதால் இவரை தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக்கினர். இந்த காலத்தில் களக்காடு மற்றும் சிவகிரி போன்ற விவசாய பெருங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் விவசாயச் சங்கத்தைக் கட்டி இறுதிக்காலம் வரை சிறப்பாக பணியாற்றி வந்தார்.

 

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தலித்துகளுக்கு  ஒரு கிணறும் மற்ற சமூகத்தினருக்கு ஒரு கிணறும் எனப் பல காலமாக இருந்து வந்ததை மாற்றி அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே கிணறு என்று மாற்றி சமத்துவத்தை உருவாக்கினார். கிராமத்தில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களை நல்ல வழியில் நடக்கவும் முதல் முதலாகப் பாரதியார் பெயரில் ஒரு வாசகசாலை ஆரம்பித்தார். இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்றக் கூட்டம் நடக்கும் போது தலித் உறுப்பினர்களைச் சரிசமமாக உட்கார வைத்து ஊராட்சி மன்றக் கூட்டத்தை நடத்தினார்.  பூதலபுரம் கரிசல் பூமி, மழைக் காலங்களில் சாலைகள் மறைந்து சகதிகளாகக் காட்சி தரும். எனவே தான் உருவாக்கிய வாசகசாலை மூலமாக இளைஞர்களின் உதவியோடு சாலை அமைத்து இருபுறமும் புளியமரம் மற்றும் புங்கை மரம் நட்டு வளர்க்கச் செய்தார்.

 

அம்மரங்கள் இன்றும் பசுமை இயக்கத்தை நினைவூட்டும் வண்ணம் நிமிர்ந்து நிற்கிறது. இருள்சூழ்ந்த கிராமத்தை ஒளியூட்டும் விதத்தில் மின் வசதி செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுத்து கிராமத்தை ஒளி மயமாக்கினார். கிராமத்து அருகில்  ஓடை நீர் வீணாகி கடலில் கலப்பதைக் கண்ட அவர் சென்னை வந்து, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மறைந்த சோ.அழகர்சாமியை அழைத்துக்கொண்டு, அன்றைய விவசாய அமைச்சராக இருந்த மறைந்த முனைவர் கா.காளிமுத்து அவர்களைச் சந்தித்து ஒரு மனுவினைக் கொடுத்து, ஓடை நீர் கடலில் கலப்பதைத் தடுத்து ஒரு அணை கட்டி தண்ணீரைத் தேக்கி வைத்து, பாசன வசதிக்கு வழி வகுத்தார். இது போன்று ஊர்மக்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர தனது ஊரில் சொந்த இடத்தில் ஒரு மருத்துவமனை உருவாக வழி வகுத்தார்.

 

எட்டயபுரம் ஜமீன் நிலத்தில் விவசாயம் செய்து வந்த விவசாய பெருமக்களைக் காப்பாற்றும் பொருட்டு அது சம்பந்தமான வழக்கை நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றார். அந்த நிலங்களை நொடிந்து போன விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்து அவர்களுக்கு நிம்மதியான வாழ்வை அமைத்துக்கொடுத்தார். இளம் வயதிலேயே அரசியல் பிரவேசம் பெற்று, தன் அரசு பதவியையும் உதறித்தள்ளிவிட்டு, பின்னர் கம்யூனிஸ்ட்டாக மாறி வளர்ந்து, புரட்சி வரம் பெற்று, மக்கள் தலைவராக உயர்ந்து நின்ற ஆ.வேலுச்சாமித்தேவர் அவர்கள் 02.08.1982 ஆம் ஆண்டு தனது சுவாசத்தை நிறுத்திக்கொண்டார். எந்த ஆங்கில மாதத்தில் (ஆகஸ்டு) பிறந்தாரோ அதே மாதத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(இன்று தியாகி ஆர்.வேலுச்சாமித்தேவர் 111வது பிறந்தநாள் 21.08.2021)

நிறுவனர்;- க.அய்யாசாமி, எம்.ஏ.

தியாகி ஆர்.வேலுச்சாமி தேவர் நினைவு அறக்கட்டளை, சென்னை-600089.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடி நிகழ்ச்சியின் அழைப்பிதழில் சர்ச்சை!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Controversy in Prime Minister Modi's program invitation

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கொங்கு பகுதியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் கொங்கு பகுதியானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜவுளி துறையிலும் சிறந்து விளங்குகிறது. தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற பகுதியாக திருப்பூர் திகழ்கிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் புதிய மையமாக மாறியுள்ளது.

தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து மதுரையில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ள டிஜிட்டல் மயமாக்கல் செயலாக்கத் திட்டங்கள் குறித்த புகைப்படங்களையும் பார்வையிட்டார். மேலும் மாணவ மாணவிகளுடனும் உரையாடினார். மாநாட்டில் உரையாற்றுகையில், “உலகளாவிய வாய்ப்புகள் நமது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கதவைத் தட்டுகின்றன. அதே சமயம் பல நாடுகளில் உற்பத்தியாகும் கார்கள், நம் சிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தயாரிக்கும் பாகங்களை கொண்டுள்ளன” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Controversy in Prime Minister Modi's program invitation

மேலும் நாளை (28.02.2024) காலை 8.40 மணிக்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டு செல்லும் பிரதமர் மோடி தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்திற்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் சாந்தனு தாக்கூர், தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, கீதாஜீவன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் பெயர் இடம்பெறவில்லை. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் இடம் பெறாதது மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.