Skip to main content

நாய்கள் மீது கல்லெறிந்தவருக்கு அடி-வளர்த்தவர் மீது வழக்கு!

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

dog

 

மனிதர்கள் மீதான வளர்ப்பு நாய்களின் பாசமும், வளர்ப்பு நாய்களின் மீதான மனிதர்களின் பாசமும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. காரணம், நாயை வளர்க்கும் ஒவ்வொரு மனிதனும், தான் செலுத்தும் பாசத்தைக் காட்டிலும் பல மடங்கு நன்றியுணர்வையும், பாசத்தையும் அதனிடமிருந்து பெற்றுத் திளைப்பதுதான். தன்னை முற்றிலும் உணர்ந்த ஒரே ஜீவன், தான் செல்லமாக வளர்க்கும் நாய் மட்டுமே என, குடும்பத்தினரைவிட ஒருபடி மேலாக மனதில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறான். அந்த நாய்க்கு ஏதாவது நடந்தால், துடித்துப் போகிறான்.

 

மேலே குறிப்பிட்டுள்ளது, வளர்ப்பு நாய்கள் அனைத்துக்கும் பொருந்தும் அளவுக்கு, வளர்ப்பவர்களுக்குப் பொருந்தாது. மனிதனுக்கு மனிதன் வளர்ப்பு நாய் மீதான அன்பின் விகிதாச்சாரம் மாறுபடும். சரி, நடப்பு நிகழ்வான வளர்ப்பு நாய்கள் குறித்த விஷயத்துக்கு வருவோம். ஸ்ரீவில்லிபுத்தூர்–தோப்பூரில் வசிக்கும் சிவன்பெருமாள், தனது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார். குருபுத்திரன் என்பவர், ஷிப்ட் முடித்துவிட்டு நள்ளிரவு கடந்து அதே ஏரியாவிலுள்ள தனது வீட்டுக்கு டூவீலரில் சென்றார். சிவன்பெருமாள் வீட்டை குருபுத்திரன் கடந்து சென்றபோது, வளர்ப்பு நாய்கள் விடாமல் குரைத்தபடி, கடிக்கவருவதுபோல் அவரை நோக்கி விரைந்துள்ளன. உடனே டூவீலரை ஸ்டான்ட் போட்டு நிறுத்திய குருபுத்திரன்,  அங்கு கிடந்த கல்லை எடுத்து நாய்களின் மீது எறிந்தார். இதனைக் கண்ட சிவன்பெருமாள் ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கம்பைக் கையிலெடுத்து குருபுத்திரனின் தலையில் அடித்தார்.  

 

நெற்றியில் ரத்தக்காயத்துடன் வன்னியம்பட்டி காவல்நிலையம் சென்ற குருபுத்திரன்,  நாய்களை வளர்க்கும் சிவன்பெருமாள் தன்னைக் கம்பால் அடித்ததாகப் புகார் கொடுத்துள்ளார்.  சிவன்பெருமாள் மீது சட்டப் பிரிவுகள் 294(b) (பொது இடத்தில் ஆபாசமாகத் திட்டியது), 324 (மிருகத்தை அபாயம் விளைவிக்கப் பயன்படுத்தியது) மற்றும் 506(ii) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியிருக்கிறது.

 

வளர்ப்பு நாய் மீது என்னதான் பாசமிருந்தாலும், சகமனிதனும் தன்னைப்போல் ஒரு உயிரினமே என்பதை மறக்கலாமா? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.