Skip to main content

“குமரி ஆனந்தன் சுயசரிதை எழுத வேண்டும்” - ப.சிதம்பரம்

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் 90-வது பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வேட்டி கொண்டாடப்பட்டது. அப்போது, குமரி ஆனந்தனுக்கு காங்கிரசார், ஆளுயுர மாலை அணிவித்தனர். மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், எம்.பி., வரவேற்புரையாற்றினார்.

 

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது; “இலக்கிய செல்வர் குமரி அனந்தன் வரலாற்றுப் பெட்டகம். தேசியத்திற்கான, காங்கிரஸ் கட்சிக்காக அவர் ஆற்றிய பங்கு மறக்கமுடியாது. மக்கள் பிரச்சனைகளுக்காக பலமுறை நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். நடப்பதில் மன்னாதி மன்னன் குமரி அனந்தன். தேசத்தைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் வீறுகொண்டு எழ வேண்டும். அரசியல் இயக்கத்தில் வெற்றியும் வரும், பின்னடைவும் வரும். நாம் தோல்வி வரும்போது துவண்டு விடுகிறோம். நமக்கு நம்பிக்கை வேண்டும். நாம்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்த முடியும். சிறந்த தலைமை வேண்டும், உறுதியான தலைமை வேண்டும். அப்படி இருந்தால் இயக்கத்தை வழிநடத்த முடியும். சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் வழிநடப்போம்” இவ்வாறு அவர் பேசினார்.

 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், எம்.பி பேசியதாவது; “இந்திய அரசியலில் குமரி ஆனந்தன் தெரிந்து கொள்ளாத விஷயம் இருக்கமுடியாது. அரசியல் ஆளுமை, இலக்கிய ஆளுமை, தமிழ் ஆளுமை மேடைப்பேச்சு ஆளுமை, மொழி ஆளுமை என அனைத்து ஆளுமைகளையும் உடையவர் பெரியவர் குமரி அனந்தன்.

 

குமரி அனந்தன் 90வது வயதைத் தொடங்குகிறார். 1933ஆம் ஆண்டில் பிறந்தார். அன்று நடந்த வரலாறு, பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் நடந்த வரலாற்றை மறைந்து வருகிறார்கள். இன்னும் வருகிற நாள்களில் 2014ஆம் ஆண்டில் தான் சுதந்திரம் அடைந்தது என்று சொல்லுவார்கள். பாடப்புத்தகத்தின் வாயிலாகத்தான் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். அதுமாறி வேறுவகையாக நூல்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஜவஹர்லால் நேரு தனது 40 வயதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார். இளைஞர்கள் பொறுப்பிற்கு, பதவிக்கு வரமுடியாது என்பதை நாம் மனதளவிலாவது ஒழிக்க வேண்டும். குமரி ஆனந்தன் தன் (சுயசரிதை) வரலாற்றை எழுதவேண்டும். அவர் எழுதினால் அதில், தமிழகத்தின் வரலாறு, காங்கிரஸ் கட்சியின் வரலாறு இடம்பெறும். அதனை ஓரிரு வருடங்களில் அவர் எழுதி எங்களுக்குத் தரவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

 

சு.திருநாவுக்கரசர் எம்.பி பேசியதாவது; “நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்று குமரி ஆனந்தன் எழுதிய நூலைப் படிக்கவும்.. பேச்சாற்றல், எழுத்தாற்றல் உடையவர். ரயில் நிலையத்தில் பயணிகளின் பணிவான கவனத்திற்கு என்று ஒலிக்கும். அதனை, பயணிகளின் கனிவான கவனத்திற்கு என்று மாற்றியவர் குமரி அனந்தன். கவர்னர் மாளிகையில் குமரி அனந்தன் தங்க வேண்டும் என்று அவருடைய ஜாதகத்தில் இருக்கிறது. அதனை நாம் செய்யத் தவறிவிட்டோம். அது வேறு வழியில் நடந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 90 வயதில் உடல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு காரணம் அவருக்கு எந்தக் கெட்டப்பழக்கம் இல்லாததுதான். இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த வரலாற்றையும், ராகுல் காந்தி பிரதமராகும் வரலாற்றையும் சேர்த்து குமரி அனந்தன் எழுத வேண்டும். குமரி அனந்தன் 100 ஆண்டுகள் கடந்து வாழவேண்டும்” என்றார்.

 

இவ்விழாவில், முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர் எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.