Skip to main content

தமிழகத்திற்குப் படையெடுக்கும் கேரள வாத்துக்கள்!

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Kerala geese invading Tamil Nadu!


தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. அங்கு பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து கேரளாவின் கோழிக்கோடு, இடுக்கி, மூணாறு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தின் அரிபாடு பகுதியைச் சேர்ந்த குஞ்சுமோன் என்பவர் அங்கு வாத்துப் பண்ணை வைத்துள்ளார். அங்கு இன்குபேட்டர் மூலம் குஞ்சு பொறிக்கப்பட்டு கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளில் குஞ்சு ஒன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.

 

இந்நிலையில் கேரளாவில் தொடர் மழை காரணமாக, அவரது ஏரியாவில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாத்துக் குஞ்சுகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்படவே, தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகேயுள்ள கோவிந்தப் பேரி கிராமத்திற்கு வந்தவர் அங்கு பண்ணை அமைத்து வாத்துக் குஞ்சுகளைப் பராமரித்து வருகிறார். இந்த வாத்துக் குஞ்சுகள் அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு சாலையின் ஓரமாக மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போன்று வரிசையாக மந்தகாசமாக நடைபோடுவது காண்போரை வியக்க வைக்கிறது.

 

கேரளாவில் தற்போது மழைகாலம் தொடங்கிவிட்டது. வாத்துக்களை வெள்ளநீர் அடித்துச் சென்று விடுவதால் அங்கு பராமரிக்க முடியாமல் இங்கே கொண்டு வந்த பராமரித்து வருவதோடு பிறபகுதிகளுக்கும் விற்பனை செய்து வருகிறோம் என்கிறார் உரிமையாளரான குஞ்சுமோன்.

 

இந்த 6 ஆயிரம் வாத்துக் குஞ்சுகளும் உரிமையாளர் அசைக்கிற பிரம்புக்கு கட்டுப்பட்டு சிதறாமல் சீராக நடைபோட்டுச் செல்வது புருவங்களை உயரவைக்கிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.