Skip to main content

கொட்டித் தீர்த்த பேய் மழை! தண்ணீரிலும் கண்ணீரிலும் தத்தளிக்கும் கன்னியாகுமரி! 

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Kanniyakumari heavy rain and flood

 

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகக் கன மழை பெய்தது. இதில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த இடைவிடாத மழையால் மாவட்டம் முழுவதும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளில் நீர் வரத்து அதிகரித்ததையொட்டி அந்தப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

Kanniyakumari heavy rain and flood

 

பின்னர் அந்த அணைகளில் இருந்து 30 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் கட்டுக்கடங்காத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் உள்ள 20 அடி உயரத்திலான கல் மண்டபத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்கிறது. மேலும் தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு, பழையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோரம் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை மூழ்கடித்துள்ளது. இதனால் 5 வீடுகள் இடிந்து விழுந்தது.

 

Kanniyakumari heavy rain and flood

 

குழித்துறை மற்றும் குறும்பனையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் நிஷான், ஜெபின் ஆகிய இருவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தனர். அதே போல் கிராம்பு பறிக்கும் தொழிலாளி வாழையத்து வயலைச் சேர்ந்த சித்திரைவேல் (39), காளிகேசம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் இரண்டு நாட்களாக ஈடுபட்டுள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்ட கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு நெல், வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் அந்த விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 

Kanniyakumari heavy rain and flood

 

வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், கல்லுபாலம் இசக்கி அம்மன் கோவில், காளிகேசம் இசக்கி அம்மன் கோவில் உட்பட 10க்கும் மேற்பட்ட கோவில்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் ஆளூரில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் மண் மற்றும் கற்கலால் மூடியது. இதில் அனந்தபுரி ரயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது. மேலும் ஆறுகாணி, பத்துகாணி, மருதம்பாறை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதிலும் மக்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து செல்லமுடியாத அளவுக்கு சாலைகளில் வெள்ளம் குளம் போல் காட்சியளிக்கிறது. 

 

Kanniyakumari heavy rain and flood

 

செங்கல் சூளைகள், ரப்பர் தோட்டங்கள், நர்சரி பூந்தோட்டங்களில் வெள்ளம் புகுந்ததால் அந்த விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வீடுகளைச் சூழ்ந்து வெள்ளக்காடாக இருந்ததால் வீடுகளில் இருந்தவர்களை தீயணைப்பு வீரர்களும், சமூக தொண்டர்களும் ரப்பர் படகு மூலம் மீட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 600 பேரை மீட்டு, முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இதில் நித்திரவிளை அருகே வைக்கலூரில் ஆற்று வெள்ளம் புகுந்ததால் அது தனித் தீவாக மாறி அதில் 40 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர்களின் படகு கவிழ்ந்ததால் 13 தீயணைப்பு வீரர்கள் நீந்தி கரையைச் சேர்ந்தனர்.

 

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (18-ம் தேதி) குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்தன் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கான நிவாரணங்களும் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'அப்பாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' - விஜய் வசந்த் நம்பிக்கை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'I will win by a bigger margin than my father' - Vijay Vasant Hope

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நான் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன். மீண்டும் வெற்றிபெற்று என்னுடைய மக்கள் பணியை மீண்டும் தொடருவேன் என்று நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன். தேர்தலைப் பொறுத்தவரை 2019ல் எனது தந்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2024 தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரி என்பது இயற்கை வளம் சார்ந்த பகுதி. குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த தொகுதியில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்பவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக நடந்து கொண்டிருந்த ரயில்வே ரெட்டிப்பு பாதையை வேகப்படுத்தியிருக்கிறோம். இப்படி பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்'' என்றார்.