Skip to main content

ஐந்து பெண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாணராமன் -நான்காவது மனைவி புகார்!

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

 Kalyanaraman cheated five women - fourth wife complains!

 

கடலூர் மாவட்டம் மேலகுப்பம் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர் புதுச்சேரி அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் 'புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகம் (42), அவருடைய தாயார் வசந்தா ஆகிய இருவரும் காயத்ரி வீட்டிற்கு பெண் கேட்டுவந்தனர். அப்பொழுது  உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் பெண் கொடுக்க சம்மதித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 27.07.2020 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது 21.08.2020 அன்று புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.  அப்பொழுது கரோனா ஊரடங்கு என்பதால் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க முடியவில்லை. 

 

அவரை திருமணம் செய்து கொள்வதற்காக வரதட்சணையாக 6 பவுன் தங்க நகை, இரு சக்கர வாகனம் மற்றும் பீரோ கட்டில் வழங்கப்பட்டது. மூன்று மாதங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் காயத்ரியிடம் அதிகப் பணம், அதிக நகை கேட்டு தினந்தோறும் தகராறு செய்து அடித்துத் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து காயத்ரி தன் தாயிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக தாய் காயத்ரியின் மாமியார் வீட்டிற்கு வந்து அவர்களிடம்  பேசி காயத்ரியை தன் வீட்டிற்கு  அழைத்துச் சென்றார். அப்பொழுது  காயத்ரி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.  தாய் வீட்டிற்கு வந்த பிறகு கணவர் என்னை வீட்டிற்கு வந்து பார்க்கவுமில்லை,  பேசவும் இல்லை. ஆதலால் காயத்ரி ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டதற்கு, ' நீ எனக்கு மனைவியே இல்லை'  என்று  உதாசீனப்படுத்தினார்.

 


கணவர் பேசாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க அவரை பற்றி விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே 3 மனைவிகள் உள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதில் முதல் மனைவி அனிதா என்கிற இந்திரகுமாரி,  இரண்டாவது மனைவி தேவி, மூன்றாவது மனைவி கனகவல்லி ஆகியோரை திருமணம் செய்ததும், தன்னை நான்காவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து காயத்ரி பிரசவத்திற்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது புதுச்சேரி வம்பாகீரபாளையத்தை சேர்ந்த பிரேமா என்கிற பிரபாவதியை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது.

 


காயத்ரியை திருமணம் செய்யும் போது முதல் மனைவி அனிதாவுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறி  திருமணம் செய்துள்ளார். ஆனால்  இருவருக்கும் விவாகரத்து ஆகவில்லை. இப்படித் தொடர்ந்து ஐந்து  பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து காயத்ரி கேட்டபோது  அடியாட்களை வைத்து அடிக்கவும், கொலை செய்யவும் திட்டம் போட்டு உள்ளார் எனத் தெரியவந்தது. தொடர்ந்து பல பெண்களை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்து வருகிறார். மேலும் இவர் மீது மூன்று சீட்டு லாட்டரி விற்பனை சம்பந்தமாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது.  இந்த புகார் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.