Skip to main content

ஜெயலலிதா சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!

Published on 26/05/2020 | Edited on 27/05/2020
Judge to decide on Jayalalithaa house case

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பதற்கு, நிர்வாகியை நியமிக்கக்கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடைய,  913 கோடி  ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க,  நிர்வாகியை நியமிக்கக்கோரி சென்னையை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்கில், ஜெயலலிதாவின் உறவினர்களான ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு, அவர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். மேலும் வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் அமர்வு,  கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி,  தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. இந்த வழக்குகளில், நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் 27.05.2020 புதன்கிழமை தீர்ப்பளிக்கின்றனர்.


புதன்கிழமை தீர்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே வேதா நிலையத்தை அரசுடைமையாக்க அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது தொடர்பாக, ஜெ.தீபா அல்லது ஜெ.தீபக் தரப்பில் முறையிட வாய்ப்புகள் உள்ளன. அப்படி முறையிடப்படும் பட்சத்தில் அந்த கோரிக்கை தொடர்பாக, நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் அதன் மீதான விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

சொத்து மதிப்பு; பைஜூஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அடுத்த சிக்கல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
The next problem that occurred in ByJus

இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம் பைஜூஸ். கேரளாவைச் சேர்ந்த பொறியாளரான ரவீந்திரன்(44) என்பவரால் தொடங்கப்பட்ட இந்தச் செயலியில் இணையதளம் வழியாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறலாம். கொரோனா காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இணையதள வழியாக கல்வி கற்பதற்கு இந்த பைஜூஸ் பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம், பைஜூஸ் பெரும் வருவாய் ஈட்டியது. மேலும், இதன் காரணமாக போர்ப்ஸ் பணக்காரப் பட்டியலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் இடம்பிடித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு, பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டதால், இணைய வழிமுறையில் கல்வி கற்கப் பலரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பைஜூஸுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கடன் சுமை, ஊழியர்களின் பணி நீக்கம், வருவாய் இழப்பு, அடுத்தடுத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எனக் கடும் பின்னடைவை பைஜூஸ் சந்தித்தது. 

இதனால், பைஜூஸில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்து, தங்கள் பணத்தைத் திரும்ப பெற்று வந்தனர். இதன் காரணமாக, இந்த நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலவாணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ரவீந்திரன் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அந்நிய செலவாணி மேம்பாட்டு சட்டத்தின்படி, சுமார் ரூ.9,362 கோடி அளவிற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரவீந்திரன் மீது குற்றம்சாட்டியது.

அடுத்தடுத்து சிக்கல்களைச் சந்தித்து வருவதைத் தொடர்ந்து, ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க, அவருக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை உயர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பைஜூஸ் பங்குதாரர்கள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், EGM எனப்படும் பைஜூஸ் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (23-02-24) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையே இந்தக் கூட்டத்தில், நிறுவனத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த முறைகேடுகள், பொறுப்பற்ற நிர்வாகம் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

அதே வேளையில், EGM கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானங்களையும்ம் அடுத்த கூட்டம் வரை செயல்படுத்தக் கூடாது என்று பைஜூஸ் நிர்வாகம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், EGM கூட்டத்தை நடத்தலாம், ஆனால் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மார்ச் 13ஆம் தேதி வரை அமலுக்கு வராது எனத் தெரிவித்தது.

இதற்கிடையே, ஓராண்டுக்கு முன்பு பைஜூஸ் நிறுவனர் ரவீந்தரனின் சொத்து மதிப்பு ரூ.14,545 கோடியாக இருந்த நிலையில், தற்போது பூஜ்ஜியமாக சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பைஜூஸ் நிறுவனரின் சொத்து மதிப்பை ஆராய்ந்த ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவரது சொத்து பூஜ்யமாகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டது.

பைஜூஸ் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் வேளையில், அர்ஜுன் மோகன் தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற 6 மாதங்களில், அர்ஜுன் மோகன் பதவி விலகியுள்ளார். அர்ஜுன் மோகன் பதவி விலகியதை அடுத்து பைஜூஸ் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளை ரவீந்தரன் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பைஜூஸ் நிறுவனப் பொறுப்பில் இல்லாதிருந்தாலும் ஆலோசகராக அர்ஜுன் மோகன் தொடருவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் ஏற்கெனவே மோசமாக இருக்கும் வேளையில், சி.இ.ஓ அர்ஜுன் மோகன் வெளியேற்றம் கூடுதல் பிரச்சனையாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது.