Skip to main content

மணல் திருடர்களுடன் கூட்டு... மதுபோதையில் வாக்கி டாக்கியைப் பறிகொடுத்த தலைமைக் காவலர்!

Published on 25/09/2021 | Edited on 27/09/2021

 

Joint with sand thieves ... Chief Constable who snatched a walkie talkie under the influence of alcohol!

 

மணல் திருடர்களுடன் கூட்டு சேர்ந்து மது குடித்த இடத்தில் வாக்கி டாக்கியை மணல் திருடர்களிடமே பறிகொடுத்துவிட்டு மது போதையில் விழுந்து எழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தலைமைக் காவலர். தலைமைக் காவலருக்கு மது ஊற்றிக் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த வாக்கி டாக்கியைத் திருடிய 4 மணல் திருடர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் தலைமைக் காவலர் அன்பழகன். இவர், அப்பகுதி மணல் திருடர்களிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பவர். சம்பவ நாளிலும் சில மணல் திருடர்களிடம் பேசியுள்ளார். யாரும் இவரைக் கவனிக்கவில்லை. அதன் பிறகு வழக்கமாக சிக்காத திருட்டு மணல் வாகனம், சம்மட்டி விடுதி காவல் எல்லையில் சிக்கிக்கொண்டது. அதன் பிறகு சிறிது நேரத்தில் தலைமைக் காவலர் அன்பழகனை ஒரு பேக்கரிக்கு அருகே வரச்சொல்லி அழைத்த மணல் திருடும் கும்பல், “உங்களுக்கு மாமூல் கொடுக்கவில்லை என்று எங்கள் வாகனத்தைச் சிக்கவைத்துவிட்டீர்கள். நீங்களே மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்டவர்கள், கூடவே மது விருந்தும் நடத்தியுள்ளனர். மது போதை அதிகமான நேரத்தில் மணல் வாகனம் மீட்கப்படாமல் போனதால் காவல்துறையிடம் இருந்த வாக்கி டாக்கியை அவருக்கே தெரியாமல் திருடி வைத்துக்கொண்டனர்.

 

வாக்கி டாக்கி திருடப்பட்டது தெரியாமல் அங்கிருந்து சென்ற தலைமைக் காவலர் அன்பழகன், மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றித் தெரியாத கீரனூர் காவல் நிலைய காவல்துறையினர் அன்பழகனைத் தேடிக் கண்டுபிடித்து வாக்கி டாக்கி பற்றி கேட்க, அதன் பிறகே வாக்கி டாக்கி காணாமல்போனது தெரிந்திருக்கிறது தலைமைக் காவலருக்கு. உடனே அன்பழகனை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், அவருடன் மது குடித்த 4 பேரைத் தேடிப் பிடித்து விசாரித்தபோது, சம்மட்டி விடுதியில் பிடிபட்ட மணல் வாகனத்தை மீட்பதற்காக அன்பழகனை அழைத்துச் சென்றோம். ஆனால் வாகனத்தை மீட்டுத்தரவில்லை. அதனால் எங்களுடன் சேர்ந்து மது குடிக்க வைத்து அவரிடம் இருந்த வாக்கிடாக்கியை அவருக்கே தெரியாமல் திருடி பெங்களூருவில் ஒரு குவாரி மணலில் புதைத்து வைத்திருப்பதாகக் கூறி வாக்கி டாக்கியை எடுத்துக் கொடுத்துள்ளனர். 

 

சம்பவம் குறித்து கீரனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷின் புகாரின் பேரில் மாத்தூர் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வழக்குப் பதிவுசெய்து இன்பசுரேஷ், முகேஷ் கண்ணன், சீனிவாசன், செந்தில் ஆகிய நான்கு பேரை கைது செய்தார். இதில் முகேஷ் கண்ணன், அதிமுக ஐ.டி. விங்க் பிரமுகராவார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.