சென்னையில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கரோனா நோய்த்தொற்று தினசரி எண்ணிக்கை அதிகரிப்பதால், கரோனா நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், தனிமனித இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணிக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.