தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த மழை இன்னும் தீவிரமாக இருந்துவருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுவந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்றதுபோல் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், "எந்தக் காரணம் கொண்டும் இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் பெரிய அளவில் தண்ணீர் வெளியேற்றத்திற்கு வாய்ப்பில்லை. நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். அதிகப்படியான நீர் வந்தாலும் அதனை பகல் நேரத்தில் வெளியேற்ற அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்" என்றார்.