Skip to main content

ரஜினி மன்ற நிர்வாகியின் புதுமைப்படுத்தல் – ஆச்சர்யமான அரசியல் கட்சியினர்!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018




வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது நெரிஞ்சந்தாங்கல் கிராமம். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இந்த கிராமத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த ஊரில் அரசின் ஒரு ஆரம்பப்பள்ளி உள்ளது. 40க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிக்கும் இந்த பள்ளி பராமரிப்பின்றி காணப்பட்டதால், இந்த பள்ளியை பார்த்து பெரும்பாலான மக்கள் பயந்து தங்களது பிள்ளைகளை வேறு வழியில்லாமல் தங்களது சக்திக்கு மீறி தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்கவைத்து வருகின்றனர்.

இதுப்பற்றிய தகவல் அறிந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி, அப்பள்ளியை தத்தெடுத்து புதுப்பித்து தரும் பணியில் இறங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவருக்கு கடந்த வாரம் வண்ணம் பூசி, சுவற்றில் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தலைவர்களுள் ஒருவரான காந்தி, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், சட்டமேதை அம்பேத்கர், கல்வி தந்தை எனப்போற்றப்படும் காமராஜர் போன்ற தேசத்தலைவர்களின் படங்களும், விவசாயமே நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை மாணவர்கள் உணரும் வகையில் விவசாயி ஏர் ஓட்டுவது, பெண்கள் நாற்று நடுவது போன்ற ஓவியம், தமிழ்மொழி ஆலமரம் போல் வளர்ச்சியடைந்துள்ளதை மாணவ – மாணவிகளுக்கு எளிமையாக விளக்கும் வகையில் ஆலமரத்தில் தமிழ் எழுத்துக்கள் பூத்துள்ளது போன்ற ஓவியம், தெருக்கூத்து கலையே தமிழகத்தின் கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் ஓவியம் போன்றவற்றை சுவற்றில் வரையவைத்தார்.

பள்ளி கட்டிடத்துக்கு புதிய வண்ணம் பூசியதோடு, பள்ளியின் விளையாட்டு திடலில் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான ஊஞ்சல், ராட்டினம் போன்றவையும், பள்ளிகளில் சரியான கழிப்பிட வசதி இல்லாததால் சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பது பள்ளி பிள்ளைகளின் வாடிக்கை, அது அசுத்தத்தை ஏற்படுத்தி சுற்று சூழலை மாசுப்படுத்தும் என்பதால் பள்ளி வளாகத்தில் நவீன கழிவறை அமைத்து தந்துள்ளார். அதோடு, பள்ளியை சுற்றி மரங்கள் நட்டு அதை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் கூண்டு அமைத்துள்ளார்.

அதோடு, பள்ளி மைதானத்தில் மாணவ – மாணவிகளிடம் யோகவை வலிறுத்தும் வாசகங்கள் கொண்ட தட்டிகள், நீர் மேலாண்மை குறித்து தட்டி போன்றவற்றையும் வைத்து மாடர்ன் பள்ளியாக மாற்றியிருந்தார் ரவி. சுமார் 3 லட்ச ரூபாய் செலவில் புதுமைப்படுத்தப்பட்ட அப்பள்ளியை இன்று செப்டம்பர் 6ந்தேதி பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற மாவட்ட – ஒன்றிய அளவிலான நிர்வாகிகள், அதிமுகவினர், பாமகவினர் என பல கட்சியினரும், அக்கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

நிகழ்ச்சியின் இடையே, 4 ஆம் வகுப்பு மாணவி மதுமிதா, 3 ஆம் வகுப்பு சந்தியா, 5 ஆம் வகுப்பு மாணவி மனிஷா இருவரும் காந்தி மற்றும் காமராஜர் குறித்து ஆங்கிலத்தில் வாழ்க்கை குறிப்பை மனப்பாடமாக பேசினர். காமராஜார் பற்றியும், காந்தியை பற்றி 4 ஆம் வகுப்பு மனோஜ், 4 ஆம் வகுப்பு நித்திஷ்குமார் இருவரும் தமிழில் பேசி அங்கிருந்த பொதுமக்களின் கைதட்டல்களை பெற்றனர்.

இதுக்குறித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த போளிப்பாக்கம், பிள்ளையார்குப்பம் அய்யந்தாங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவிகளின் பேச்சுப்போட்டி ஆங்கிலத்தில் முதலில் பேசச்சொன்னதற்கு காரணம், தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையிலும் அரசுப்பள்ளி சளைத்ததல்ல என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவே ஆங்கிலத்தில் பேசவைத்தோம். அரசு பள்ளியை பெற்றோர்கள் புறக்கணித்தால் நாளை பணம்மில்லாதவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றவர்கள், எங்கள் பள்ளியையும் ரஜினி மக்கள் மன்ற மா.செ ரவி புதுமைப்படுத்தி தரவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தனர்.

இறுதியில் பேசிய ரஜினி மக்கள் மன்ற மா.செ சோளிங்கர் ரவி, நாட்டில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு களத்தில் இறங்கியுள்ளார் தலைவர் ரஜினிகாந்த். அவர் எங்களிடம், நேர்மையான அரசியல், அனைத்து கட்சியினருடன் தோழமை, படிக்க முடியாத பிள்ளைகளை படிக்க வைத்தல், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு அதிக அக்கறை எடுத்துக்கொள்ள சொல்லியுள்ளார். அதன்படி, பள்ளி மாணவ – மாணவிகளிடமிருந்து மாற்றத்தை துவங்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளியைப்போல் அரசு பள்ளியை உயர்த்த வேண்டும் என்பதற்காக நான் பிறந்த ஊர் பள்ளியை முதல்கட்டமாக புதுமைப்படுத்தியுள்ளோம். இந்த பள்ளிக்கு இன்னும் தேவையான அனைத்து வசதிகளும் என்னால் முடிந்த அளவுக்கு செய்துதரப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் பலரும் வருகை தந்தது மற்ற அரசியல் கட்சியினரை ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்தது. முக்கிய கட்சி நிர்வாகி ஒருவர் நம்மிடம், மக்களை நினைச்சா ஆச்சர்யமா இருக்குங்க, நாங்கயெல்லாம் காசுக்கொடுத்து தான் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கறோம், ரஜினி பெயரை சொன்னதும் ஆளுங்க வந்து விழாவில் கலந்துக்குறோம், ரஜினி கட்சி ஆரம்பிச்சி ரவுண்ட்ஸ் வந்தா நாங்க எதிர்த்து நிறைய போராட வேண்டியிருக்கும் போல என புலம்பினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!