Skip to main content

அஜீரணக் கோளாறு... கூட்டம் கூட்டமாகச் செத்து விழுந்த ஆடுகள்!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

Indigestion problem for sheep near tuticorin


தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம், விளாத்திகுளம், வேம்பார் ஆகிய பகுதிகள் மானாவாரி விளைச்சலைக் கொண்ட பூமி. வானம் பார்த்துத்தான் காடுகளில் மானாவரிப் பயிரிடுவது நடைமுறை. உளுந்து பாசிப்பயிறு, பெரும்பாலான பகுதிகளில் மக்காச் சோளம் போன்றவையே அப்பகுதிகளின் விளைபயிர்.

 

இங்கு பயிர்களுக்கு அடுத்தபடியான தொழில், ஆடு வளர்ப்பு. இவற்றில், செம்மறியாடுகள் வளர்ப்பு மிகுதியானவை. குறிப்பாக விளாத்திகுளம் ஒட்டிய வவ்வால்தொத்திப் பகுதியைச் சேர்ந்த முருகன், கண்ணன், ஆறுமுகம், காளிமுத்து, பரமசிவம் இவர்கள் ஐவரும் 500க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை வளர்த்து வருபவர்கள். அவைகளின் மூலம் கிடை போட்டு வருமானம் பார்ப்பவர்கள். நேற்று முன்தினம் இவர்கள் தங்களின் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டார்கள், அவைகள் மக்காச் சோளப் பகுதியில் மேய்ந்துவிட்டுத் திரும்பியபோது. அவற்றுக்கு மாலையில் தண்ணீர் வைத்து விட்டுக் கொட்டடியில் அடைத்துள்ளனர். பாதுகாப்பிற்காக அவர்கள் அங்கேயே படுத்துக் கொண்டனர்.

 

நேற்று காலை, வழக்கம் போன்று மேய்ச்சலுக்காகக் கொட்டடியை திறந்தவர்கள் அதிர்ந்து விட்டனர். அட்டைக்கப்பட்டு வைத்திருந்த ஆடுகள் கூட்டம் கூட்டமாகச் செத்து விழுந்திருக்கின்றன. சில ஆடுகள் அரை மயக்கத்தில் இருந்துள்ளன.

 

சுமார் 156 ஆடுகள் மாண்டு போனது கண்டு அழுதிருக்கிறார்கள். தகவலறிந்த கால்நடைத்துறை, தூத்துக்குடி மண்டல இயக்குனர் சம்பத் தலைமையிலான குழுவினர் மற்றும் கால்நடை புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின் அவர்கள், சுமார் 65 ஆடுகளை பரிசோதித்ததில் அவைகள் மக்காச் சோளம் பயிரை அளவுக்கு அதிகமாகத் தின்றதால் அது செரிமானமாகாமல் 'உப்பிசம்' ஏற்பட்டு இறந்தது தெரிய வந்திருக்கிறது. மேலும், வயிறு உப்பல் கோளாறு ஏற்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு உடனடியாக ஜீரணமாவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன.

 

கால்நடை மண்டல இயக்குனர் சம்பத், “செரிமானக் கோளாறு காரணமாக ஆடுகள் இறந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், அது தவிர்த்து வேறு எதுவும் ஆடுகளின் இறப்பிற்குக் காரணமா என்பதையறிய ஆட்டின் உடற்கூறுகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.

 

பலியான ஆடுகளின் மதிப்பு ரூ.12 லட்சத்திற்கும் மேல்போகும் என்கிறார்கள் பரிதாப கதியிலிருக்கும் ஆடு வளர்ப்போர். தாங்க முடியாத இந்தத் திடீர் இழப்பிற்கு அரசு உதவ வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.