
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெப்பாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள். விவசாயியான இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நவம்பர் 4 ஆம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் பெருமாள். உடன் அவரது 10 வயதேயான பேரன் சந்துரு வந்துள்ளார். பெருமாள் வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்து மர்ம நபர்கள், இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தபோது, பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய சிறுவன் சந்துருவை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே சந்துரு உயிரிழந்துள்ளான். இருவரின் உடலையும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த வாணியம்பாடி கிராமிய போலீசார், வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற கொலைகாரர்களை தேடிவருகின்றனர்.