
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள வடகரையை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் போடியில் உள்ள டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா, அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு யஷ்வந்தினி என்ற மகளும், அபிஷேக் கிருத்திக் என்ற மகனும் உள்ளனர்.
இதில் அபிஷேக்கிருத்திக் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கோவையிலுள்ள வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி சேர்ந்து உள்ளார். மேலும் இவர்களது மகள் யஸ்வந்தினி மருத்துவ படிப்புக்காக விண்ணப்பித்துள்ளார். இதற்காக கடந்த 8-ஆம் தேதி சென்னையில் நடந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக நால்வரும் ஏழாம் தேதியே தங்கள் ஊரில் இருந்து காரில் சென்னை சென்றுள்ளனர். அங்கு நடந்த கவுன்சிலிங்கில் யஸ்வந்தினி கலந்து கொண்டுள்ளார். அதில் அவருக்கு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது.
இதையடுத்து குடும்பத்தினர் நால்வரும் சென்னை யில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு எட்டாம் தேதி இரவு நாமக்கல் பல் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்டி இடத்தை தக்கவைத்துக் கொண்டு பிறகு, அங்கிருந்து தங்கள் ஊருக்கு செல்வது என முடிவு செய்து சென்னையில் இருந்து நாமக்கல் நோக்கி காரில் சென்றுள்ளனர். காரை சௌந்தரராஜன் ஓட்டியுள்ளார். அவர்களது கார் திருச்சி செல்லும் சாலையில் வேப்பூரில் இருந்து தலைவாசல் ஆத்தூர் வழியாக நாமக்கல் சென்றுள்ளனர். அப்படி செல்லும்போது சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் என்ற இடத்தின் அருகே உள்ள தத்தாத்திரிபுரம் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சவுந்தர்ராஜன் ஓட்டிச் சென்ற கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதியுள்ளது.
சம்பவ இடத்திலேயே சௌந்தரராஜன், மனைவி பிரியா அவர்களது மகன் அபிஷேக் கிருத்திக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த சௌந்தரராஜன் அவரது மகள் யஸ்வந்தினி ஆகியோரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி சௌந்தர்ராஜன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரது மகள் யஸ்வந்தினியை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி அவரது மகன் என மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவங்கள் மாவட்டத்தில் உள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.