
இமாச்சலப் பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கி, வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். அதேசமயம் இந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்கள் நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது. பின்னர் தமிழகம் கொண்டுவரப்பட்ட உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய சைதை துரைசாமி, 'இந்த வாழ்க்கை துன்பம் மிக்கது. சோதனை மிக்கது என்று தெரிந்திருந்தும் நான் இதை பின்பற்றுகிறேன் என்றால் விதி வலியது என்பதை இறைவன் எனக்கு உணர்த்தி இருக்கிறான். இறையருள் இந்த குடும்பத்திற்கு இருக்கிறது என்றால் என் மகன் திரும்பி கிடைத்திருக்கிறான்.
அவன் உடல் கிடைக்காமல் போயிருந்தால் வாழ்க்கை துக்கத்தில், சோகத்தில் என்ன நடந்திருக்கும் என்றே தெரியாது. ஆகவே இறையருளால் என் மகன் உடல் கிடைத்திருக்கிறது. அப்படி என்றால் நான் செய்த காரியங்கள் எல்லாம் இறையருள் பெற்றதாக இருக்கிறது என உணர்ந்து இனி அதை விரிவாக்கம் செய்ய இருக்கிறேன். இந்த சமுதாயத்திற்காகவும், சமூகத்திற்காகவும் வாழ்வது தான் இந்த பிறப்பின்; இந்த படைப்பின்; இந்த வாழ்க்கையின் அடையாளம் என்பதை உணர்ந்து அதை நோக்கி நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி நினைவேந்தல் நிகழ்ச்சி என் மகனுக்கு நடக்கும் என்று ஒருக்காலும் கனவில் கூட நினைக்கவில்லை'' என கண்ணீர் ததும்பப் பேசினார்.