விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி மணிவிழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “இன்னும் பல கடமைகள் உள்ளதால் திருமாவளவன் நீண்ட காலம் வாழ வேண்டும். அன்று திமுகவில் இருந்து செயல்பட்டார், இன்று கூட்டணிக்குள் இருந்து செயல்படுகிறார். தம்பி உடையான் படைக்கு அஞ்ச வேண்டாம். இது தேர்தல் நட்பு அல்ல, கொள்ளை உறவு. வெற்றிக்கு பிறகும் ஒரு தாய் பிள்ளையாக இருக்கிறோம். ஆரியத்திற்கு எதிரான அனைத்தும் திராவிடம் தான். இதை விட சுருக்கமாக யாரும் சொல்லி விட முடியாது, இதனால் இந்த ஆட்சியை பார்த்தால் கசக்கிறது.
திருமாவளவன் நெற்றி பொட்டில் அடித்தார் போல் சொல்லியுள்ளார், ‘பெரியாரை எதிர்ப்பவர்கள் திமுகவையும் எதிர்க்கிறார்கள்’. இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் திராவிட கருத்தியலால் தான். நான், அதனை நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக் கொள்கிறேன். திமுக 70 ஆண்டு காலம் நிலைத்து நிற்பதற்கு காரணம் இத்தகைய அடித்தளத்தில் நிற்பதால் தான். கோட்டையில் இருந்தாலும், அறிவாலயத்தில் இருந்தாலும் திமுகவின் கொள்கை ஒன்று தான்.
ஆர்.எஸ்.எஸ். பாஜக கருத்தியல் எதிர்ப்பை திமுக சிறிதும் சமரசம் செய்ய மாட்டேன். கட்சித் தலைவர், முதலமைச்சர் என இரு பொறுப்பில் உள்ளேன். நான் டெல்லிக்கு காவடி தூக்கவா போறேன், கை கட்டி வாய் பொத்தி உத்தரவு பெறவா போறேன், நான் கலைஞரின் பிள்ளை. உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கலைஞரின் வழியில் தான் என்றைக்கும் செயல்படுவோம். நலத்திடங்களுக்காக மத்திய அரசு - மாநில அரசுக்கும் உறவு உள்ளதே தவிர பாஜகவிற்கு திமுகவிற்கு உறவு இல்லை. ஆகவே திருமாவளவன் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் திமுகவின் கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டு கொடுக்க மாட்டேன், குறைந்த பட்ச சமரசமும் செய்து கொள்ள மாட்டான் உங்களது சகோதரன் ஸ்டாலின். அனைத்து சாதியினரும் அர்ச்சகர், பெண் அச்சகர், குடியுரிமை திருத்த் சட்ட திருத்த எதிர்ப்பு இவையெல்லாம் தான் திராவிட இயக்கத்திற்கு எந்த சமரசமும் இல்லையென்பதற்கு சாட்சிகள். இதனால் தான் சனாதனவாதிகள், வகுப்புவாதிகளால் இந்த அரசு அதிகம் விமர்சனம் செய்யப்படுகிறது.
சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம். இதனை நானும் உங்களோடு சேர்ந்து வழிமொழிகிறேன். இதில் சங்கத்துவம் என்ற சொல் புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்புக்கும் எல்லாம் உயர்க்கும் என்ற சங்க கால சக்திக்கு எதிரானது தான் சனாதனம், இதனை ஒன்றிணைந்து வீழ்த்துவோம். இது தான் திருமாவளவனின் 60வது பிறந்த நாளின் மிகப்பெரிய கொள்கை பரிசு. இப்போது இருப்பது போல் 30 வருடங்களுக்கு முன்னர் நான் திருமாவளவனைப் பார்த்து இருந்தால் நானே அவருக்கு திருமண செய்து வைத்து இருப்பேன். அது நிகழவில்லை.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரை பார்க்கும் போதெல்லாம் திருமணம் பற்றி பேசுவார். அவர் சொல்லி நடக்காத ஒன்று இவரது திருமணம் தான். ஆனால் அவர் இந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமண செய்துவிட்டார். பல ஊரில் உள்ள சிறுத்தைகள் தான் அவரது குழந்தைகள். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது உங்களுக்கு தாயும், தந்தையுமாக உள்ள திருமாவளவனை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.