9 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அருண்குமார்(32). "இவர் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து பாலியல் தொழிலுக்குத் தள்ளியதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனவும் சில நாட்களுக்கு முன்பு இவரது 2 மனைவிகள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாகப்பட்டினம் துணைக் காவல் ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்தது. அருண்குமார் என்ற இளைஞர் வேலைக்குச் செல்லாமல் இருந்துவந்துள்ளார். அப்போது, கஞ்சா கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அதன்மூலம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், சினிமா பாணியில் வசனம் பேசி, பல பெண்களை தன் வலையில் வீழ்த்தி திருமணம் செய்துள்ளார், அருண்குமார். சில காலம் அவர்களுடன் குடித்தனம் நடத்தியவர், பிறகு அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்குத் தள்ளி, தனது கோர முகத்தைக் காட்டியுள்ளார். இப்படி 9 பெண்களை மோசம் செய்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.