Skip to main content

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவர்! 

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

husband and wife incident police investigation

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்- ராஜகுமாரி தம்பதியின் மகள் அபி (என்கிற) ராஜலட்சுமி( வயது 24). இவர் அங்கன்வாடியில் சத்துணவு சமையலகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்த, கொத்தனார் வேலை செய்யக்கூடிய நாகராஜ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

 

இத்திருமணத்திற்கு முன்னதாக ராஜலட்சுமிக்கு வேறு நபருடன் முதலாவது திருமணம் நடந்துள்ளதாகவும், முதல் கணவர் இறந்தவிட்ட நிலையில், இரண்டாவதாக நாகராஜை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், கடந்த ஆறு வருடங்களாக ராஜலட்சுமி- நாகராஜ் தம்பதியினர் கம்மாபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதேசமயம் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், நாகராஜ் அவ்வப்போது தனது மனைவியான ராஜலட்சுமி மீது சந்தேகமடைந்து, இருவருக்கும் பிரச்சினை ஏற்படுமென கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், நேற்று (25/06/2022) ராஜலட்சுமி வீட்டில் இருந்தபோது, கணவன், மனைவிக்கு இடையே, மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த நாகராஜ், வீட்டிலிருந்த கத்தியால் தனது மனைவி ராஜலட்சுமியின் கழுத்தைக் கொடூரமாக துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது மனைவி இறந்ததும் கம்மாபுரம் காவல் நிலையம் சென்று தனது மனைவியை கொன்றுவிட்டதாக சரணடைந்துள்ளார். அதன்பின்பு கம்மாபுரம் காவல்துறையினர் உடனடியாக ராஜலட்சுமி வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த ராஜலட்சுமியின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

 

இதுகுறித்து கம்மாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தாலும், குழந்தை பெற முடியாத சூழ்நிலையாலும் ஏற்பட்ட பிரச்சினையால் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.