Skip to main content

‘என் தமிழினத்தைக் கொன்று குவித்த இலங்கைக்கு உதவுவதா?’ - ஒருநாள் சம்பளத்தை விட்டுத்தர மறுக்கும் தலைமைக் காவலர்! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

Highcourt Head Constable written letter to assistant commissioner

 

‘அரசாங்க உத்தரவுக்கு நான் செவிமடுக்காமல் இருக்கமுடியுமா? அரசு ஊழியரான நான், அந்த உத்தரவை மீறி, எனது தனிப்பட்ட கருத்தை முன்வைக்க முடியுமா?’  என்னும் அளவிலேயே, அரசாங்கத்தின் எந்த ஒரு உத்தரவுக்கும் அரசு ஊழியர்கள் கட்டுப்பட்டு நடந்துவருகிறார்கள். விதிவிலக்காக, ‘அரசாங்கம் சொன்னதற்கெல்லாம் தலையாட்ட முடியாது’ என்கிற ரீதியில், தனது கருத்தை உரிய காரணங்களை விளக்கி காவல் துணை ஆணையாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார், சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவு தலைமைக்காவலர்.

 

தமிழக அரசோடு எந்த விஷயத்தில் தலைமைக் காவலர் முரண்படுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ, தமிழக அரசு எடுத்துவரும் மனிதநேய நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்வோம். 


முதல்கட்டமாக, 9000 மெட்ரிக் டன் அரிசி, 200 டன் ஆவின் பால்பவுடர் மற்றும் 24 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் என ரூ.45 கோடி மதிப்பிலான பொருட்களை, தமிழக அரசு இலங்கைக்கு கப்பலில் அனுப்பிவைத்துள்ளது. தமிழ்நாடு அரசால் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொருளாதார நிவாரண உதவித் திட்டத்திற்கு, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

 
தலைமைக் காவலர் விஷயத்துக்கு வருவோம். அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருநாள் ஊதியத்தை இலங்கை அரசுக்கு உதவுவதற்காக விட்டுக்கொடுக்கவேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தலைமை காவலரோ, இலங்கைக்கு உதவுவதில் எனக்கு விருப்பமில்லை எனக் காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார். 


1. பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியைக் கொலை செய்தவர்கள், இலங்கை நாட்டினர்.

2. நமது தமிழ் இனத்தைக் கொன்று குவித்தது இலங்கை அரசாங்கம்.

3. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, காவல்துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணம் இலங்கையர்.

4. அரசுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்புவித்த, பெற்ற பணபலனைத் தற்போது ஈட்டிய விடுப்பு ஒப்புவித்தல் ஆணையை அரசு ரத்து செய்ததால், ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதிய பலன் பாதிக்கப்பட்டுள்ளது.

5. தற்போது மத்திய அரசு DA அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு இன்று வரை DA அறிவிக்கவில்லை.

6. நீதியரசர் கிருபாகரன் காவலர்களுக்கான ஊதியக் குறைவினை ஏற்றித் தர பலமுறை கோரியும், தமிழக அரசு இதுநாள் வரை செவி சாய்க்கவில்லை.

 

Highcourt Head Constable written letter to assistant commissioner

 

எனக் குறிப்பிட்டுவிட்டு, ‘தன்னை மிஞ்சி தான் தான தர்மம். அண்டை நாடான இலங்கைக்கு தமிழக அரசு நல்ல எண்ணத்தில்தான் உதவுகிறது. ஆனால், எனது குடும்பத்தைப் பராமரிக்கவே என்னுடைய சம்பளம் போதுமானதாக இல்லை. அதனால், எனது ஒரு நாள் ஊதியத்தை விட்டுக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

 
இந்நிலையில், விருதுநகர் கன்ட்ரோல் ரூம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன்  சொன்னதாக ஒரு காவலர், ‘இலங்கை நிவாரண நிதிக்கு ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ரூபாய் நூறாவது கொடுத்துத்தான் ஆகணுமாம். அதற்கு மனு எழுதிக்கொடுக்கச் சொல்லுறாங்க. அந்த மனுவை இன்றே கொடுத்துவிட வேண்டும். ஒருவேளை, ரூ.100-க்கு மேல் கொடுக்க நினைத்தால், அதை மனுவில் குறிப்பிட வேண்டும். மாதச் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் எழுதுபவர்கள், தொகை எவ்வளவு என்பதைக் குறிப்பிட வேண்டும். காவலர்களின் மனுக்கள் இன்று மாலைக்குள் கேம்பஸுக்கு வந்துவிடவேண்டும்’ என ஓபன் மைக்கில் பேசியதும் சர்ச்சையாகியுள்ளது.

  
தமிழக அரசு, நெருக்கடியில் தவிக்கும் இலங்கை அரசுக்கு உதவும் விஷயத்தில், காவல்துறை வட்டாரத்திலும் முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை வேண்டும்'-அன்புமணி வலியுறுத்தல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Action should be taken without further delay'-Anbumani insists

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடர்கதையாகி வரும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  ராமேஸ்வரம் மீனவர்கள்  21 பேரை சிங்கள கடற்படையினர்  கைது  செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை  சிங்கள கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றன.  கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும்,  15-ஆம் தேதி  15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.   அதனால், அந்தப் பகுதிகளில்  ஏற்பட்ட பதட்டமும், கவலையும்  விலகுவதற்கு  முன்பே  மேலும் 21  மீனவர்களை  சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

'Action should be taken without further delay'-Anbumani insists

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை  மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின்  அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மற்றொருபுறம்  தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை  அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் படையினரால்  கைது செய்யப்பட்டுள்ள  58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தொடரும் அத்துமீறல்; மீண்டும் 21 மீனவர்கள் சிறைபிடிப்பு

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
continuing trespass; 21 fishermen captured again

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அண்மையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10/03/2024 அன்று 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை மீண்டும் கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் மீனவர்களின் இரண்டு விசைப்படகு களையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.