Skip to main content

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; இபிஎஸ் உதவியாளரின் ஜாமின் மனு தள்ளுபடி!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

 

government job money admk leader chennai high court



அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி (வயது 51). முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். 

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற பி.இ., பட்டதாரி வாலிபரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக அசை காட்டி, 17 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தலைமறைவாக இருந்த நடுப்பட்டி மணியை கைது செய்தனர். இக்குற்றத்தில் உடந்தையாக இருந்த அவருடைய நண்பர் செல்வக்குமார் என்பவரையும் கைது செய்தனர். 

 

இவர்கள் இருவரும் சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியின்போது, எடப்பாடி பழனிசாமியிடம் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு 30- க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை ஆசை காட்டி 1.50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே, நடுப்பட்டி மணி ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது ஜன. 19- ஆம் தேதி விசாரணை நடந்தது. அவரை 25 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது அதற்கு ஈடான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, ஜன. 24- ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. 

 

அதையடுத்து, திங்கள்கிழமை (ஜன. 24) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மணி தரப்பு வழக்கறிஞர்கள், 25 லட்சம் ரூபாய் ரொக்கமோ, அதற்கு ஈடான சொத்து ஆவணங்களோ அவரிடம் இல்லை என்று பதில் அளித்தனர். இதையடுத்து நடுப்பட்டி மணியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.