Skip to main content

“தேர்வுக்கு வந்தா மட்டும்போதும்; அரசு வேலை கன்ஃபார்ம்..” லட்சங்களை சுருட்டிய நபர் கைது!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

Government job Fraudster arrested
தேவநாதன்

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்துள்ள செவலபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(30). இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்த சிங்கனூரைச் சேர்ந்த தேவநாதன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு நண்பர்களாகப் பழகி உள்ளனர். 

 

அப்போது தேவநாதன், ராஜசேகரிடம் “உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு டி.என்.பி.சி. குரூப் தேர்வுகளில் கலந்து கொண்டால் போதும்; அவர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாங்கித் தருகிறேன்”  என்று கூறியுள்ளார். அதனை நம்பி ராஜசேகர் மற்றும் அவரது உறவினர் ராஜேஷ் ஆகியோர் தேவநாதனிடம் தலா ஏழு லட்ச ரூபாய் வசூல் கொடுத்துள்ளனர். 

 

அதேபோன்று மேல்மலையனூரைச் சேர்ந்த முருகன், ஆனந்தன், அருள்மொழி, தேவன், திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலன், மணி, பூங்காவனம் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களிடம் 5 லட்சம், 3 லட்சம் என மொத்தம் 42 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேவநாதனும் அவரது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த நாகராஜ், பாபு, தினேஷ், சரவணன் ஆகியோர் பணத்தைப் பெற்று உள்ளனர். 

 

இவர்கள் கூறியபடி வேலை எதையும் வாங்கித் தராமல், பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்து வந்துள்ளனர். அதனால், பணத்தை பறி கொடுத்தவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மோசடிகளில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்போது, தேவநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

 

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவள்ளி என்பவருக்கும், எதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மணிமேகலைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மணிமேகலை, புஷ்பவள்ளியிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரு வருஷம் கழித்து இரண்டு லட்ச ரூபாயாக தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய புஷ்பவள்ளி, தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 12 லட்ச ரூபாயை ஒரு ஆண்டில் 24 லட்சமாக இரட்டிப்பாக தருமாறு கொடுத்துள்ளார். அதேபோன்று பாசி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் என பலரிடத்திலிருந்தும் பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார் மணிமேகலை. ஆனால், கூறியபடி ஒரு ஆண்டு கழித்து வாங்கிய பணத்தை இரட்டிப்பாக்கி தரவும் இல்லை, கொடுத்த அசல்பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியிருக்கிறார்.

 

Government job Fraudster arrested
வெங்கடேசன்

 

இதுகுறித்து புஷ்பவள்ளி, அவலூர்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். போலீசார் முன்னிலையில் 12 லட்ச ரூபாயை குறிப்பிட்ட நாட்களில் தருவதாக வெங்கடேசன் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் எழுதிக் கொடுத்துள்ளனர். அதன்படியும் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து மணிமேகலை அவரது கணவர் வெங்கடேசன் ஆகிய இருவர் மீதும் புஷ்பவள்ளி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர். அவரது மனைவி புஷ்பவள்ளி தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது