Skip to main content

 தனியார் ஓட்டலில் நடைபெற்ற கண்காட்சியில் நகைகளை திருடிச்சென்ற கும்பல்

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
gold jewellery



கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நகை கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு நேற்று முன்தினம் மாலையில் டிப்-டாப் உடையணிந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் கும்பல் வந்தது. அவர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த நகைகளை பார்வையிட்டனர்.


அதில் ஒரு வாலிபர் மற்றும் 2 பெண்கள் அங்கிருந்த விற்பனையாளரிடம் நகைகளின் விலையை கேட்டு அதை வாங்கி பார்த்தனர். அந்த நகைகள் பிடித்து இருப்பதாகவும், சிறிது நேரம் கழித்து வந்து அவற்றை வாங்கி செல்வதாகவும் கூறிவிட்டு அவர்கள் 6 பேரும் வெளியே சென்று விட்டனர்.


இந்த நிலையில் அந்த அரங்கில் இருந்த விற்பனையாளர்கள் நகையை சரி பார்த்தபோது, அதில் 24 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.


அப்போது, டிப்-டாப் உடை அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பலில் 3 பேர் விற்பனையாளரின் கவனத்தை திசைதிருப்புவதும், அதை பயன்படுத்தி மற்ற 3 பேரும் 24 பவுன் நகையை திருடும் காட்சியும் தெளிவாக பதிவாகி இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை; சென்னையில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
avadi Jewelry incident Sensation in Chennai

துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நகைக்கடைக்கு 4 மர்ம நபர்கள் காரில் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.