Skip to main content

''அவர்தான் சதீஸ் என்கிற சதீஸ்குமார்!'' கோகுல்ராஜ் வழக்கில் விஏஓ சாட்சியம்!!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள திருச்செங்கோடு விஏஓ, மூன்றாவது முயற்சியில் முக்கிய குற்றவாளியை சரியாக அடையாளம் காட்டியதால் சிபிசிஐடி போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

 


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். திருச்செங்கோடு கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது.

 

GOKULRAJ


இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டபோதும், குற்றவாளிகளிடம் மோட்டார்சைக்கிள், செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றியபோதும் தயாரிக்கப்பட்ட கைப்பற்றுதல் மகஜரில், அப்போது திருச்செங்கோடு டவுன் விஏஓவாக இருந்த மணிவண்ணன், அரசுத்தரப்பில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

 

GOKULRAJ


கோகுல்ராஜ் கொலை வழக்கில், அரசுத்தரப்பு சாட்சிகளிடம் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. 

 


கடந்த 10.1.2019ம் தேதி சாட்சியம் அளிக்க அரசுத்தரப்பு சாட்சியான விஏஓ மணிவண்ணன் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது குற்றவாளி கூண்டில் இருந்த சதீஸ்குமாரை அவர் சரியாக அடையாளம் காட்டவில்லை. பின்னர், மறுநாளைக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. ஜனவரி 11ம் தேதி நடந்த விசாரணையின்போதும் அவர் சதீஸ் என்கிற சதீஸ்குமாரை அடையாளம் காட்டுவதற்கு பதிலாக தவறுதலாக பிரபு என்பவரை அடையாளம் காட்டினார்.

 


கோகுல்ராஜூம், அவருடைய தோழி சுவாதியும் சம்பவத்தன்று, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போதுதான் யுவராஜ் மற்றும் கூட்டாளிகள் கோகுல்ராஜை மிரட்டி கடத்திச்சென்றனர். அந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. 

 


அந்தக் காட்சிகளைப் பார்த்து அடையாளம் சொல்லும்படி விஏஓ மணிவண்ணனிடம் கேட்டபோது, மூக்குக் கண்ணாடியை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்ததால், அடுத்த முறை சரியாக அடையாளம் காட்டுகிறேன் என்று கூறினார். இதையடுத்து விசாரணை ஜனவரி 18, 2019ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 


அதன்படி வெள்ளிக்கிழமையன்று (ஜன. 18) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விஏஓ மணிவண்ணனுக்கு சிசிடிவி கேமரா காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட்டன. அந்தக் காட்சியில் இடம்பெற்றிருந்த யுவராஜின் கூட்டாளிகள் சந்திரசேகர், அவருடைய மனைவி ஜோதிமணி, சதீஸ்குமார், யுவராஜ், அருண், செல்வராஜ், ரஞ்சித், ரகு என்கிற ஸ்ரீதர், குமார் என்கிற சிவக்குமார் ஆகியோரை அடையாளம் காட்டினார்.

 

GOKULRAJ


இதையடுத்து குற்றவாளி கூண்டில் இருக்கும் எதிரிகளில் சதீஸ் என்ற சதீஸ்குமாரை சரியாக அடையாளம் காட்டும்படி அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன், சாட்சியிடம் கூறினார். விஏஓ மணிவண்ணன் சாட்சி கூண்டில் இருந்தவாறே, செல்வராஜ் அருகில் இருப்பவர்தான் சதீஸ் என்கிற சதீஸ்குமார் என்று அடையாளம் காட்டினார். 

 

GOKULRAJ


அவர் அடையாளம் காட்டிய நபர் யார் என்று கையை உயர்த்தும்படி நீதிபதி இளவழகன் கூறினார். அதற்கு சட்டென்று சங்கர் கையை உயர்த்தி, தனது பெயரைக் கூறினார். இதனால் அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் அதிருப்தி அடைந்தாலும், மீண்டும் சாட்சியைப் பார்த்து குற்றவாளி கூண்டுக்கு அருகில் சென்று நன்றாக பார்த்து அடையாளம் காட்டுங்கள் என்றார்.

 


அதன்படி அவரும் குற்றவாளி கூண்டுக்கு அருகில் சென்று, இவர்தான் சதீஸ் என்கிற சதீஸ்குமார் என்று மிகச்சரியாக அடையாளம் காட்டினார். அதன்பிறகே அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களும், சிபிசிஐடி போலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அத்துடன் நீதிமன்ற விசாரணை முடித்துக்கொள்ளப்பட்டது.

 

GOKULRAJ


இதையடுத்து, அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணையை வரும் 25.1.2019ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். அன்றைய தினம், விஏஓ மணிவண்ணனிடம் யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ குறுக்கு விசாரணை நடத்த வாய்ப்புள்ளதால், இப்போதே இந்த வழக்கில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.