Skip to main content

கோகுல்ராஜ் வழக்கு: பல்டி சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல்!

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பல்டி சாட்சியம் அளித்த சுவாதி உள்ளிட்ட 7 முக்கிய சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜன. 10) மனுத்தாக்கல்  செய்துள்ளனர்.

 

GOKULRAJ

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் (23). இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார். கடந்த 23.6.2015ம் தேதி அவரைக் காண நாமக்கல்லுக்குச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.

 

 

மறுநாள் மாலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்பட்டது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழகியதால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.

 

GOKULRAJ

 

இந்த வழக்கில், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. எதிரிகள் தரப்பில் யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 

 

இந்நிலையில், அரசுத்தரப்பில் திருச்செங்கோடு டவுன் விஏஓ மணிவண்ணன் நேற்று  நீதிபதி இளவழகன் முன்னிலையில் சாட்சியம் அளித்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் சதீஸ், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகர், அவருடைய மனைவி ஜோதிமணி உள்ளிட்டோர் போலீசார் கைது செய்யப்பட்டது குறித்தும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் குறித்தும் சாட்சியம் அளித்தார்.

 

GOKULRAJ

 

எதிரிகளிடம் இருந்து நான்கு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக விஏஓ மணிவண்ணன் கூறினார். அவற்றில் மூன்று வாகனங்கள் மட்டுமே நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. அவற்றை அவர் அடையாளம் காட்டினார். ஒரு வாகனத்தை போலீசார் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரவில்லை. 

 

 

இதையடுத்து விஏஓ மணிவண்ணனிடம் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஜன. 11) விசாரணை நடைபெறும் என்று நீதிபதி இளவழகன் அறிவித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். 

 

GOKULRAJ

 

இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கில் ஏற்கனவே பிறழ் சாட்சியம் அளித்த கோகுல்ராஜின் தோழி சுவாதி, அவருடைய தாயார் செல்வி, யுவராஜூக்கு கார் வாங்கிக் கொடுத்த புரோக்கர் செல்வி என்கிற செல்வரத்தினம், யுவராஜ் வைத்திருந்த காரின் முன்னாள் உரிமையாளர் ரமேஷ்குமார், எஸ்டிடி பூத் அதிபர் பாலகிருஷ்ணன் மற்றும் கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அவருடைய அண்ணன் கலைசெல்வன் ஆகிய 7 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த, அவர்களை திரும்ப அழைக்க க்கோரி சிபிசிஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

 

 

அரசுத்தரப்பில் பிரபல வழக்கறிஞர் பவானி பா.மோகன் இந்த வழக்கில் ஆஜராகியுள்ள நிலையில், முக்கிய சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட மனுத்தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பா.ம.க எம்.எல்.ஏ

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
pmk MLA fell on his feet and apologized

ஓமலூரில் பள்ளி மாணவ மாணவிகள் முன்பு தரையில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாமக எம்எல்ஏ அருள் கலந்து கொண்டார். அதன் பிறகு மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி ராஜ் என்பவர் தங்கள் தரப்பு நிர்வாகிகளை நிகழ்ச்சியில் பேசவிடாமல் தடுத்ததாக கூறினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

vck ad

திடீரென பாமக எம்எல்ஏ அருள், திமுக உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பேசட்டும் என தெரிவித்ததோடு நடந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என அங்கிருந்த மாணவ மாணவிகள் முன்பு தரையில் விழுந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். 'நான் அரசியல் பண்ண விரும்பல. நான் கட்சிக்காரனாக பேசவில்லை. உங்களை அசிங்கப்படுத்தி, அவமரியாதை கொடுத்திருந்தால் என்னை மன்னிச்சிருங்க' என்று கீழே விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

ஏமாற்றிய காதல் கணவன்; சாமியானா பந்தல் போட்டு 86 நாட்களாகத் தொடரும் கர்ப்பிணிப் பெண்ணின் போராட்டம்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

A cheating husband; 86 days pregnant woman's protest at Samiana Panthal

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கர்ப்பிணி பெண் ஒருவர் 86 நாளாக கணவரின் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் வேலக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். மோகன்ராஜ் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது பவித்ரா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் திருமணத்திற்குப் பிறகு ஐந்து மாதம் கழித்து சொந்த ஊரான வேலக்கவுண்டனூருக்கு சென்ற மோகன்ராஜ், காதல் மனைவியான பவித்ராவின் அழைப்புகளைத் தவிர்த்து வந்துள்ளார்.

 

காதல் கணவனிடம் தன்னைச் சேர்த்து வைக்கும்படி மோகன்ராஜின் வீட்டுக்கே சென்றுள்ளார் பவித்ரா. ஆனால் மோகன்ராஜின் பெற்றோர் கர்ப்பிணி பெண்ணான பவித்ராவை விரட்டியடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பவித்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ஆஜரான மோகன்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்த மோகன்ராஜ், வேலக்கவுண்டனூரில் உள்ள வீட்டிலிருந்து குடும்பத்தினருடன்  மொத்தமாக வெளியேறிவிட்டார். தன்னைக் காதல் கணவருடன் சேர்த்து வைக்கும்படி பவித்ரா அவருடைய குடும்பத்துடன் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மோகன்ராஜ் வீட்டிற்கு முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.