தமிழ்நாடு பவர் கம்பெனி நிர்வாகத்தைக் கண்டித்து சி.பி.ஐ. கூட்டம்!
பரங்கிப்பேட்டை IL & FS தமிழ்நாடு பவர் கம்பெனி தொழிற்சாலை நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையைக் கண்டித்து போராட இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பரங்கிப்பேட்டை சுற்றுச்சூழலை கெடுத்து தற்போது கம்பெனியின் போக்குவரத்துக்காக ஒரு துறைமுகம் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் கடல்நீரும் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனை எதிர்த்து போராடும் அரசியல் கட்சி மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மீது IL&FS கம்பெனி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படும் பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் செல்வம் நிர்வாக ஆதரவு நடவடிக்கையில் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையில் பொய் வழக்கு போடும் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
அந்த தொழிற்சாலையில் நடைபெறும் கோடி கணக்கிலான ஊழல் முறைகேடு திருட்டு சம்பவங்கள் மீது உரிய விசாரணை செய்து அரசின் முதலீடு, வங்கி முதலீடு ஆகியவைகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக அரசு விசாரனை நடத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட மனு மீதான நியாயமான விசாரணையை மேற்கொள்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கிட்டு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் நீர் செல்லும் வழிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவருகிறது. இதில் ஏரி, குளங்கள், கண்மாய் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதுடன் சின்னவாய்க்கால் கெடிலம் நதிகரை ஆக்கிமிப்புகளை அகற்றும்போது எவ்வித சமரசமும், பாரபட்சமுமின்றி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
- சுந்தரபாண்டியன்