Skip to main content

சேலம் கேஸ் சிலிண்டர் வெடிவிபத்து சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

gas cylinder incident in salem

 

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் கடந்த 23 ஆம் தேதி ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் கடந்த 23 ஆம் தேதி கோபிநாத் என்பவரின் தாயார் ராஜலக்ஷ்மி சமைப்பதற்காக எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்த பொழுது எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் வெடித்தது. ஏற்கனவே கேஸ் கசிவு இருந்ததை அறியாமல் அடுப்பைப் பற்றவைத்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது. பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தில் அருகிலிருந்த வீடு, மாடியிலிருந்த வீடு என மொத்தம் 4 வீடுகள் தரைமட்டமானது. சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். மொத்தம் 11 பேர் மீட்கப்பட்ட நிலையில் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் மூதாட்டி ராஜலக்ஷ்மி உட்பட 5 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

தீயணைப்புத்துறையில் பணியாற்றி வரும் பத்மநாபன், அவரது மனைவி தேவி, கார்த்திக்ராம் ஆகியோர் பல மணி நேர தேடுதலுக்குப் பின் சடலமாக மூவரும் மீட்கப்பட்டனர். அதேபோல் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மற்றொரு மூதாட்டி எல்லையம்மாள் என்பவரின் உடலும் கைப்பற்றப்பட்டது. இந்த விபத்துச் சம்பவத்திற்கு ஆழ்த்த வருத்தம் தெரிவித்திருந்த தமிழக முதல்வர் உயிரிழந்த 5 பேரின்  குடும்பத்திற்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருந்தார். அதேபோல் இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோருக்கு தலா 50,000 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்ட கோபி என்பவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.