Skip to main content

‘நோட்டம் பார்த்து திருடுவதை வழக்கமாக வைத்துள்ள கும்பல்’ - அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!     

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Gang that has a habit of stealing, Police arrested in action

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரசன்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விநாயகமூர்த்தி. இவர் விவசாய தொழில் மற்றும் அதனுடன் ஆடு வளர்ப்பு தொழிலும் செய்துவருகிறார். சமீபத்தில் இவர் தனது வயலில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் ஆடுகளைச் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அதில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 15 ஆடுகளைக் காணவில்லை. இதுகுறித்து சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

 

அதில் விநாயகமூர்த்தியின் வயலுக்குப் பக்கத்து வயலில் வேலை செய்தவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், அதில் மூவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த், பிரவீன்குமார், இளங்கோவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் விவசாய வேலை செய்வதுபோல் வெளியூர்களுக்குச் சென்று, அப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்வதையும் அவை இரவு நேரங்களில் அடைக்கப்பட்டிருக்கும் பட்டிகளையும் நோட்டம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

பிறகு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் டாட்டா ஏசி வாகனங்களில் ஆடு, மாடுகளைக் கடத்திச் செல்வது இவர்களது தொழிலாக இருந்துள்ளது. இதன்படி அரசன்குடி கிராமத்தில் விநாயகமூர்த்தி ஆடுகளைத் திருடிய மேற்படி மூவரும் சேலம் மாவட்டம் வெடிகாரன் புதூர் என்ற கிராமத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு அடைக்கப்பட்டிருந்த 11 ஆடுகள், நான்கு மாடுகள் அவற்றை கடத்திச் செல்வதற்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

அவற்றை ஆடு, மாடுகளைப் பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்தனர். ஆடு, மாடு கடத்தலில் ஈடுபட்ட மேற்படி மூவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். சில ஆண்டுகளாகவே வேப்பூர், லக்கூர், தொழுதூர், சிறுபாக்கம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் ஆடு, மாடுகளைப் பில்டர்கள் டாட்டா ஏசி வாகனங்களில் கடத்திச் செல்லும் சம்பவம் நடைபெற்றுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆடு, மாடு திருடர்கள் சிலரை சிறுபாக்கம் போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.