Skip to main content

ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: ஜாக்டோ-ஜியோ கோரிக்கை

Published on 27/01/2019 | Edited on 27/01/2019

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் தொடர்பாக சனிக்கிழமை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்துள்ளார். 

 

john



இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான டி.ஆர். ஜான் வெஸ்லி.
 

உங்கள் கோரிக்கைகள் என்ன?
 

01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமுல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்.
 

பழைய பென்சன் திட்டத்தை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?
 

டெல்லி முதல் அமைச்சர் புதிய பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். திரிபுராவில் பழைய பென்சன் திட்டம்தான் உள்ளது. பென்சன் திட்டத்தை பொறுத்தவரை அந்தந்த மாநில அரசு விருப்பப்படியே நடைமுறைப்படுத்தலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. 
 

புதிய பென்சன் திட்டத்தின்படி 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 50 வயதுக்கு மேல் பணியில் சேர்ந்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கான செட்டில்மெண்ட் தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை. சிலர் அந்த தொகையை பெறாமல் காலமாகிவிட்டனர். ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூபாய் 12 ஆயிரம் கோடியும், அரசுப் பணம் ரூபாய் 12 ஆயிரம் கோடியும் என தோராயமாக ரூபாய்  24 ஆயிரம் கோடிக்கு மேலாக என்ன ஆனது என்று தெரியவில்லை. இதனால்தான் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறோம்.
 

செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஜெயக்குமார் கூறுகிறாரே?

 

jayalalitha


 

கடந்த 2016 தேர்தல் பரப்புரையில் பேசிய ஜெயலலிதா, ''ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வோம், பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்துவோம்'' என்று கூறினார். மேலும் தேர்தலுக்கு முன்னர் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சாந்தா ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழுவை அமைத்தார். அந்தக் குழு தனது ஆய்வினை சமர்பித்தது. அதற்குள் ஜெயலலிதா அவர்கள் காலமானார். அதன்பிறகு இந்த விசயத்தை அரசு கிடப்பில் போட்டது. பின்னர் நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு ஒரு நபர் குழு என்று இந்த அரசு வைத்தது. அது என்ன ஆனது என்று வலியுறுத்திய பிறகு கடந்த ஜனவரி 7ஆம் தேதி நீதிமன்றத்தில் அந்த குழு அறிக்கையை சமர்பித்தது. நீதிமன்றம் அந்த அறிக்கையை பார்த்துவிட்டு, ''சாத்தியமில்லை என்று சொல்வதற்கு ஏன் ஒரு வருடம், இரண்டு வருடம் காலதாமதம் செய்ய வேண்டும்'' என கண்டித்தது. 
 

ஆனால் இந்த அறிக்கையை சமர்பிப்பதற்கு முன்பே சேலத்தில் பேசிய முதல் அமைச்சர், ''புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய முடியாது'' என்று கூறியுள்ளார். புதிய பென்சன் திட்டம் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு அறிக்கை சமர்பிப்பதற்கு முன்பாகவே முதல் அமைச்சர் எப்படி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறினார். அதன் பிறகே நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினோம். 

 

jayakumar


ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றால் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இதையும் அரசு கடன் பெற்றுதான் வழங்க வேண்டும். கூடுதல் கடன் சுமையை குறைக்க மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும். எனவே நிலுவைத் தொகை கோரிக்கையையும் ஏற்க இயலாது என்கிறாரே ஜெயக்குமார்?
 

கடந்த முறை இந்த கோரிக்கை குறித்து அமைச்சர் முன்பு பேசியபோது, நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளெல்லாம் ஊதிய நிலுவைத் தொகையை வாங்கிக்கொண்டார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று கேட்டதற்கு அமைச்சர் எந்த பதிலையும் சொல்லவில்லை. 
 

இன்னொரு முக்கியமான கோரிக்கை என்னவென்றால், அங்கன்வாடி மையத்தில் வகுப்புகளை நடத்த மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதற்கு பதிலாக 10 ஆண்டுக்கு மேலாக பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்களை, டிஇடி முடித்து வருபவர்களை அங்கன்வாடி மையத்தில் போடுகிறார்கள். ஏன் என்று கேட்டால் 2500க்கும் மேலான உபரி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதனால் போடுகிறோம் என்கிறார்கள். ஆனால் காலிப்பணியிடங்கள் எத்தனை என்று கேட்கும்போது, அமைச்சர் செங்கோட்டையன் 6 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது என்கிறார். அந்த இடத்திற்கு இந்த 2500 பேரை போட வேண்டியதுதானே? 
 

3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளார்கள். அந்த முடிவினை கைவிட வேண்டும். 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் கைவிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட எங்களது கோரிக்கைகள் நியாயமானதுதான். அரசு மக்களிடத்தில் தவறாக எடுத்து சொல்கிறது. 
 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயக்குமார் எச்சரித்துள்ளாரே?
 

நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஏற்கனவே 450 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு அழைத்துப் பேசவில்லை. அழைத்துப் பேசாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அரசு முடிவு எடுக்கிறது. 2003ம் ஆண்டில் இதே அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அரசு 1,90,000 அரசு ஊழியர்களை ஒரே அரசாணையில் டிஸ்மிஸ் செய்தபோதும், அஞ்சாமல் நின்றவர்கள்தான் இந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், பணியாளர்களும். நியாயமான கோரிக்கைக்காக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.