Skip to main content

ஹோட்டலில் வாங்கிய இட்லியில் தவளை; பதறி துடித்த நோயாளி! 

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Frog in Italy bought at the hotel

 

நோயாளி ஒருவருக்குத் தனியார் உணவகத்திலிருந்து வாங்கிச்சென்ற இட்லியில் தவளை இறந்து கிடந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அருகில் ஒரு தனியார் சைவ உணவகம் செயல்பட்டுவருகிறது. அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைந்திருப்பதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் இந்த ஹோட்டலில் உணவு வாங்கிச் சாப்பிடுகின்றனர். 

 

இந்நிலையில், 27ஆம் தேதி காலை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாடாகுடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் உறவினர் ஒருவர் அந்த ஹோட்டலில் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு, நோயாளி முருகேசனுக்கும் 4 இட்டிலிகளைச் சுடச்சுட பார்சல் வாங்கிக்கொண்டு சென்றார்.

 

பசியோடு பார்சலை வாங்கிப் பிரித்த முருகேசனுக்கு பேரதிர்ச்சி. அவரது உறவினர் வாங்கிவந்த சூடான இட்லிக்குள் தவளை வெந்து இறந்துகிடந்ததைப் பலரிடமும் காட்டி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அந்தப் பார்சலை முருகேசனின் உறவினர்கள் மற்றும் அந்த வார்டில் சிகிச்சை பெற்றுவரும் சக நோயாளிகளின் உறவினர்களும் ஒன்றாகச் சென்று ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்டனர்.

 

அந்த சமயத்தில் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களும் "என்னது இட்லிக்குள்ள தவளை இறந்து கிடந்ததா" என பதறியடித்துக்கொண்டு சாப்பாட்டு இலையைப் பாதியிலேயே மூடிவிட்டு வாயில் கைவிரலைவிட்டு வாந்தி எடுத்தனர். அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்டனர்.

 

அந்த ஹோட்டல் உரிமையாளரோ, “இதுல என் தவறு ஒன்றுமில்லை. தொடர்ந்து விடாம மழை பெய்யுது. தவளைங்க எப்படி மாவுக்குள்ள விழுந்ததுன்னு தெரியல. அவங்க வாங்கிச் சென்ற இட்டிலிக்கு உண்டான பணத்தை மட்டும் கொடுத்துடுறேன்” என கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூச்சலிட, வேறு வழியின்றி இட்லி ஊற்ற வைத்திருந்த மீதி மாவை பொது மக்கள் கண்முன்னே கீழே கொட்டிவிட்டு, “தயவுசெய்து இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என கெஞ்சிக்கேட்டுக்கொண்டே ஹோட்டலை அவசர அவசரமாகப் பூட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

 

இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், "சுகாதாரமற்ற முறையில் அலட்சியப் போக்குடன் பல உணவகங்கள் கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் செயல்படுகின்றன. அவர்களைக் கண்கானிக்க வேண்டிய சுகாதாரத்துறை, உணவுத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதன் விளைவு இப்படி நடக்கிறது. இந்தக் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதோடு இருந்துவிடாமல், கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் மற்ற கடைகளில் மாற்றம் வரும். கும்பகோணம் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கும்பகோணத்தில் உள்ள உணவகங்களில் சுகாதாரமான உணவுகள் சமைக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வுசெய்ய வேண்டும். குறிப்பாக, நோயாளிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஹோட்டல்களில் இதுபோல நடப்பதற்கு காரணம் அதிகாரிகள் ஹோட்டல்களை அடிக்கடி ஆய்வு செய்யாததுதான். இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். 

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Enforcement Department raid in Chennai

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

Enforcement Department raid in Chennai

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 5 ஆம் தேதி (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஜாபர் சாதிக் வீட்டின் சீல் அகற்றப்பட்டது. இதற்கிடையே ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 

Enforcement Department raid in Chennai

இந்நிலையில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். (C.R.P.F.) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் (N.C.B.) இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) ஆஜராகி விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Enforcement Department raid in Chennai

இதே போன்று சென்னையில் தியாகராயர் நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல உணவகத்திற்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.