![former minister mr vijaya baskar home and offices raid vigilance officers](http://image.nakkheeran.in/cdn/farfuture/_PCbBOuIQxzmb-9BpOV8KeQbjjq1VKZ1W_aOc7ZJ_ko/1626962344/sites/default/files/inline-images/car3322.jpg)
அ.தி.மு.க.வைச் சேர்ந்த, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 23 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று (22/07/2021) அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு, சாயப்பட்டறை மற்றும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட 21 இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. அதேபோல் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் வீடு, அவரின் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடைபெறுகின்றன.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது கரூரில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க நிலத்தைத் தேர்வு செய்து நிலத்தை தனது பெயரிலும், தனது ஆதரவாளர்கள் பெயரிலும் வாங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த சோதனையின் போது உணவு எடுத்துச் சென்ற காவல் வாகனத்தை தடுத்து நிறுத்தி அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் நடைபெற்று வந்த சோதனையும் நிறைவுற்றது. அங்கிருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றவில்லை என அதிகாரிகள் கூறுகின்றன. அதேசமயம், பெருங்களத்தூரில் உள்ள உதவியாளர் வீட்டிலும், மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.
கடந்த 2019- ஆம் ஆண்டு போக்குவரத்துக் கழகத்திற்கு ஜிபிஎஸ் கருவிகள் வாங்கியதில் முறைகேடு எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த தனியார் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 17 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நிறைவுற்றது. இருப்பினும், 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 25.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.