Skip to main content

ஜெ.,வின் மாஜி டிரைவரின் மனைவிக்கு மிரட்டல்; கனகராஜின் அண்ணன் கைது!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

 

former chief minister jayalalithaa former car driver brother police arrested



மர்மமான முறையில் இறந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் மனைவியை மிரட்டிய வழக்கில், அவருடைய மற்றொரு அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

 

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். 

 

ஜெ., மறைவை அடுத்து, அவருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்த அஸைன்மெண்டை முன்னின்று நடத்தியது, ஜெ.,யின் முன்னாள் கார் ஓட்டுநரும், எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையைப் பெற்றவருமான சமுத்திரம் கனகராஜ்தான் என சந்தேகிக்கப்பட்டது. 

 

அவர் மீது விசாரணை திரும்பிய நிலையில், கடந்த 28.4.2017ம் தேதி இரவு 08.30 மணியளவில், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி பிரிவு சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

 

உயிரிழந்த கனகராஜின் செல்போன் மற்றும் அவர் தொடர்புடைய சில ஆவண ஆதாரங்களை திட்டமிட்டு மறைத்து விட்டதாக அவருடைய உடன் பிறந்த அண்ணன் தனபால், சின்னம்மா மகன் ரமேஷ் ஆகியோரை கடந்த 2021- ஆம் ஆண்டு குன்னூர் காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவர்கள் இருவரும் பிணையில் விடுதலை ஆகியுள்ளனர். 

 

இது ஒருபுறம் இருக்க, கனகராஜின் இரண்டாவது அண்ணன் பழனிவேல் (வயது 44), ஜலகண்டாபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கனகராஜின் மனைவி கலைவாணி (வயது 28). குழந்தைகளுடன் சென்னையில் வசிக்கிறார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் தன் கணவருக்கு சில சொத்துகள் உள்ளன. அவற்றை விற்பதற்காக கலைவாணி வந்திருந்தபோது, கனகராஜின் இரண்டாவது அண்ணன் பழனிவேல் அவரிடம் தகராறு செய்துள்ளார்.

 

''நீ கொடுத்த புகாரால்தான் என்னுடைய அண்ணன் தனபாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கு செலவுக்காக இதுவரை 4 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். நீ புகாரை வாபஸ் பெறாவிட்டால் இங்கிருந்து சென்னைக்கு செல்ல முடியாது,'' என மிரட்டியிருக்கிறார் பழனிவேல். அங்கிருந்து செல்ல முயன்றபோது, கலைவாணியின் உடைகளைப் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். 

 

இதனால் அரண்டு போன கலைவாணி, இதுகுறித்து ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பழனிவேல் மீது மிரட்டல் விடுத்தது, ஆபாச வார்த்தையால் திட்டியது, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜூன் 28ம் தேதி கைது செய்துள்ளனர். மேட்டூர் நீதிமன்றத்தில் பழனிவேலை ஆஜர்படுத்திய காவல்துறை, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

 

கலைவாணியை மிரட்டியதாகச் சொல்லப்படும் சம்பவம் ஜூன் 3- ஆம் தேதியே நடந்துள்ளது. ஆனால் பழனிவேல் மீது ஜூன் 27- ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு, மறுநாள் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

 

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''கலைவாணி, அளித்த புகாரின் பேரில் தான் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் அழுத்தம் ஏதுமில்லை,'' என்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.