Skip to main content

சக்தி மசாலா நிறுவனத்திற்கு முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் பாராட்டு!!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Former CBI director praises Shakti Masala

 

சக்தி மசாலா நிறுவனங்களின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின்  22-வது ஐம்பெரும் விழா ஈரோடு சக்தி துரைசாமி திருமண மகாலில் 10ந் தேதி நடைபெற்றது.  இவ்விழாவில் டாக்டர் முத்துலட்சுமி விஸ்வநாதன் மற்றும் ஜெயா பழனிவேலு ஆகியோர்  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் முனைவர் பி.சி துரைசாமி தலைமை வகித்து பேசினார். இந்திய புலனாய்வுத்துறை முன்னாள் (சி.பி.ஐ) இயக்குநர் டாக்டர் டி.ஆர். கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

 

மேலும் மருத்துவத் துறையில் சிறப்பாக சேவை புரிந்துவரும் கோவை காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர். பி.ஜி. விஸ்வநாதன் மற்றும்  கோவை ஜீரண மண்டல மருத்துவர் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். சி. பழனிவேலு ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்  விருதுகளை வழங்கினார். சக்திதேவி அறக்கட்டளையின் ‘தளிர்’திட்டம் மூலம் மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று சிறப்பாக பராமரித்து வளர்த்து வந்த தனிநபர்கள், நிறுவனங்களுக்கு மரங்களின் காவலர் விருதினையும், சக்திதேவி அறக்கட்டளையின் ஆண்டு மலரையும் வெளியிட்டு சேவை அமைப்புகளுக்கு நிதி உதவி, உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை,  2020-21-ஆம் கல்வி ஆண்டின்;  12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. 

 

சக்தி மருத்துவமனை மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி அவர் பேசும்போது, “சக்தி மசாலா நிறுவனத்தினர் கிராமப்புறத்தில் இருந்து வந்து இவ்வளவு வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களின் கடின உழைப்பு, நாணயம், நம்பிக்கை. அதே சமயத்தில் பணிவு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை. அதேபோல், டாக்டர் விஸ்வநாதன், டாக்டர் பழனிவேலு அவர்களும் கிராமப்புறங்களிலிருந்து வந்து பல்வேறு வளர்ச்சி அடைந்து உள்ளனர். கூட்டுக் குடும்பம் இருந்தால் அன்பு, பாசம், பொறுமை இது எல்லாம் கிடைக்கும். சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் சேவை மூலம் பல உயிர்கள் தினசரி காப்பாற்றப்படும். இதன் ஆசி, அவர்களின் குடும்பத்திற்கு வந்து சேரும்” என்றார். 

 

பாரதி வித்யா பவன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் எல்.எம். ராமகிருஷ்ணன், அரிமா இயக்கத்தின் முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர். என். முத்துசாமி, மாநில அரசின்  டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற சித்தோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.ரத்தினசபாபதியை பாராட்டி நினைவுப் பரிசுகளையும், வழிகாட்டி திட்டம் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில் மலை பகுதியான நீலகிரி மாவட்ட மக்களின் நலனுக்காக, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது.

 

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு 2 டயாலிஸ்  இயந்திரம் வாங்க ரூபாய் 13 லட்சத்து 88 ஆயிரத்து 817 ரூபாய் மற்றும் 2020–21 ம் கல்வி ஆண்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில்  முதல், இரண்டாம் இடம்பெற்ற 150 மாணவ , மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை,  பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்கல்வி படிக்கும் 505 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை என மொத்தம் 1 கோடியே 20 ஆயிரத்து 567 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.  விழாவில் நிர்வாக இயக்குநரான டாக்டர் சாந்தி துரைசாமி, செந்தில்குமார்,  தீபா செந்தில்குமார், எம்.இளங்கோ,. சக்திதேவி இளங்கோ, ஜி.வேணுகோபால், முக்கிய பிரமுகர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.