Skip to main content

சோதனையில் சிக்கிய 3.5 லட்சம் பணம்... பறக்கும் படை அதிரடி!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

 Flying Force Action 3.5 lakh cash caught in the test

 

தமிழக சட்டமன்றத்தின் 16வது பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை, கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியிட்டது இந்தியத் தேர்தல் ஆணையம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலர்களான, மாவட்ட ஆட்சியர்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

 

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளனர். இவர்கள் தொகுதி மக்களுக்கு வழங்க பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுப்பது, விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்வது, தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கண்காணிக்க பறக்கும்படை, கண்காணிப்புக் குழுக்கள் களமிறக்கிவிடப்பட்டுள்ளன.

 

வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அலமேலுமங்காபுரம் என்ற பகுதியில், மார்ச் 3 ஆம் தேதி நிலைக் கண்காணிப்புக் குழு, கணேசன் என்பவரின் தலைமையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது, இரண்டு சக்கர வாகனத்தில் மதியம் 12 மணிக்கு இருவர் வந்துள்ளனர். அவர்களை மடக்கி சோதனையிட்டபோது 3,50,000 ரூபாய் பணம் இருந்துள்ளன. அதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. அதனைத் தொடர்ந்து அந்தப் பணத்தை வேலூர் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அதை வேலூர் சார் கருவூலத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களைக் கொடுத்துவிட்டு பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.