தமிழகத்தில் கரோனா தொற்று ஓரளவு குறைந்து வருவதை அடுத்து தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளி திறக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மீதமுள்ள வகுப்புக்கள் வரும் நவம்பர் முதல் தேதியிலிருந்து ஆரம்பிக்க இருப்பதாகத் தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், வரும் அக்டோபர் 4ம் தேதியிலிருந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்குக் கல்லூரி திறக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறைவடைந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களுக்குப் புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யப்படும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.