Skip to main content

“தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கை அறிவிக்க வேண்டும்” - உயிர்ம வேளாண் கொள்கை மாநாட்டில் கோரிக்கை! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

Farmers meeting

 

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த பெண்ணாடத்தில் தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்க கோரி தமிழர் மரபு வேளாண்மை மாநாடு நடைபெற்றது. செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன் தலைமையில், தமிழக உழவர் முன்னணி தலைவர் சி. ஆறுமுகம் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். தமிழக உழவர் முன்னணி தி.வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன் மாநாட்டின் நோக்கங்களை விளக்கி அறிமுகவுரையாற்றினார். 

 

இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் செயல்படும் நீடித்த வேளாண்மை மையத்தின் செயல் இயக்குநரும், தெலுங்கானா – ஆந்திரா மாநிலங்களில் 35 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மை செய்து வருபவருமான முனைவர் ஜி.பி.இராமாஞ்சநேயலுக்கு, நீடித்த வேளாண்மைக்கும் உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் அவர் ஆற்றியுள்ள பணிகளை பாராட்டி காந்திய பொருளாதார அறிஞர் “ஜே.சி.குமரப்பா நினைவு விருது” வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் மாநாட்டு சிறப்புரை நிகழ்த்தினார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார். 

 

சுயாட்சி இந்தியா தமிழ்நாடு தலைவர் கே.பாலகிருஷ்ணன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாமயன், தமிழக உழவர் முன்னணி தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்க ஒருங்கிணைப்பாளர் இரமேசு கருப்பையா ஆகியோர் விளக்கவுரையாற்றினர். சுயாட்சி இந்தியா கட்சியின் அனைத்திந்திய தலைவரும், தில்லி உழவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான முனைவர் யோகேந்திர யாதவ்வின் வாழ்த்துச் செய்தி காணொளி வாயிலான மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. வேளாண் பொருளியல் ஆய்வறிஞர் அரியானாவை சேர்ந்த முனைவர் தேவேந்திர் சர்மாவின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.


தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் மு.தமிழ்மணி, செந்தமிழ் மரபு வேளாண்மை நடுவம் கவிஞர் சிலம்புச்செல்வி, தாளாண்மை உழவர் இயக்க க.வே.நடராசன், பழமலை மரபுவழி வேளாண் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோட்டேரி சிவக்குமார் மற்றும் க.சரவணன், ஈரோடு மாவீரன், பேராசிரியர் சௌ.காமராசு, சீர்காழி பொற்கொடி சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 


காரைக்கால் பாஸ்கரின் மரபு விதைக் களஞ்சியம், தமிழர் மரபு உணவுத் திருவிழா, அடுப்பில்லா சமையல் செயல் விளக்கம், இயற்கை எரிவளி (பயோ கேஸ்) செயல் விளக்கம் ஆகியவை மாநாட்டில் இடம்பெற்றன. செ. கணேசன் நன்றியுரையாற்றினார். மாநாட்டு நிகழ்ச்சிகளை மா.மணிமாறன், சி. பிரகாசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 


மாநாட்டில் தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், வேளாண் விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச இலாப விலையை அடிப்படை விலையாக அறிவித்து சட்டமியற்ற வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தியும் தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் உள்ளதை பின்பற்றி தமிழ்நாட்டில் உழவர்களுக்கு ஏக்கருக்கு 12,000 ரூபாய் வீதம் நேரடி வருவாய்த் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


மாநாட்டில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உழவர்களும், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.


பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன், "உயிர்ம வேளாண்மை மாநாட்டின் நோக்கம் நமக்கு அண்டை மாநிலமாக  இருக்கின்ற ஆந்திரா, கேரளா அரசுகளை போல தமிழ்நாடு அரசும் உயிர்மை வேளாண்மையை பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும், இயற்கை வேளாண்மையில் விளையக்கூடிய விளைபொருள்களுக்கு, லாபகரமான விலை கிடைக்க சிறப்பு ஏற்பாடு செய்யவும் வேண்டுமென்பதற்கான சிறப்பு கொள்கையை அறிவிக்க வேண்டும், இயற்கை வேளாண்மையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும். அச்சட்டம் செயல்படுவதற்கு வாரியம் அமைக்க வேண்டும். ஒன்றிய அளவில் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்" எனக் கூறினார்.

 
ஆந்திர பிரதேச வேளாண் அறிவியலாளர் இராமாஞ்சநேயலு கூறும்போது, "ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள உழவர்களை திரட்டி இயற்கை வேளாண்மை பயிற்சி கொடுத்து கிட்டத்தட்ட 2024லிருந்து 2026க்குள் எல்லா மாநிலங்களிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறுவது என்ற முறையில் திட்டமிடப்பட்டுள்ளது.  தெலுங்கானாவும் அதற்கான உதவி செய்து வருகிறார்கள். சிக்கிம் முற்றிலுமாக இயற்கை வேளாண்மை மாநிலமாக மாறி உள்ளது. இப்படி மாறுவதுதான் உழவர்கள் நஞ்சு இல்லாத உணவு, லாபகரமான விளைபொருளுக்கான விலை இதை நோக்கி நகர்ந்து வருகிறோம். இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக ஆந்திரா போன்ற அரசாங்கங்கள் ஆதரவு தருகிறார்கள். இது போதாது, இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும், நகர்புறத்தில் உள்ள நுகர்வோர்களை ஒரு கூட்டுறவாக உருவாக்கி, உழவர்களை நேரடியாக இணைப்பதற்கான வழிமுறையை செய்து வருகிறோம். மக்களுக்கு நஞ்சில்லாத உணவு கிடைக்கிறது. வேளாண்மை ஒரு லாபகரமான தொழிலாக உழவர்களுக்கு மாறுகிறது. இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும். இந்திய அரசாங்கமும் உதவி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நேரடியான வருமானம் என்பதை பரவலாக்க வேண்டும். இந்தக் கொள்கை அறிவிப்புகளை இந்திய அரசின் கொள்கை அறிவிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக உழவர்களை ஒன்றிணைக்கிறோம்"  என்றார்.


முன்னதாக உழவர் போராளி தூருவாசன் மற்றும் டெல்லி உழவர் போராட்ட ஈகியர் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரைப்பட பாடலாசிரியர் கவிபாஸ்கரின் கவிவீச்சும், பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக்குழுவினரின் பறை இசையும் நடைபெற்றன. மேலும் மரபு வழி வேளாண்மை, இயற்கை விவசாயம் குறித்த நூல்கள், மரபுவழி விதைகள், மரபு வழியிலான உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன் கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாதத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களிடம் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது .ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.