Skip to main content

“தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கை அறிவிக்க வேண்டும்” - உயிர்ம வேளாண் கொள்கை மாநாட்டில் கோரிக்கை! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

Farmers meeting

 

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த பெண்ணாடத்தில் தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்க கோரி தமிழர் மரபு வேளாண்மை மாநாடு நடைபெற்றது. செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன் தலைமையில், தமிழக உழவர் முன்னணி தலைவர் சி. ஆறுமுகம் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். தமிழக உழவர் முன்னணி தி.வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன் மாநாட்டின் நோக்கங்களை விளக்கி அறிமுகவுரையாற்றினார். 

 

இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் செயல்படும் நீடித்த வேளாண்மை மையத்தின் செயல் இயக்குநரும், தெலுங்கானா – ஆந்திரா மாநிலங்களில் 35 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மை செய்து வருபவருமான முனைவர் ஜி.பி.இராமாஞ்சநேயலுக்கு, நீடித்த வேளாண்மைக்கும் உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் அவர் ஆற்றியுள்ள பணிகளை பாராட்டி காந்திய பொருளாதார அறிஞர் “ஜே.சி.குமரப்பா நினைவு விருது” வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் மாநாட்டு சிறப்புரை நிகழ்த்தினார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார். 

 

சுயாட்சி இந்தியா தமிழ்நாடு தலைவர் கே.பாலகிருஷ்ணன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாமயன், தமிழக உழவர் முன்னணி தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்க ஒருங்கிணைப்பாளர் இரமேசு கருப்பையா ஆகியோர் விளக்கவுரையாற்றினர். சுயாட்சி இந்தியா கட்சியின் அனைத்திந்திய தலைவரும், தில்லி உழவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான முனைவர் யோகேந்திர யாதவ்வின் வாழ்த்துச் செய்தி காணொளி வாயிலான மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. வேளாண் பொருளியல் ஆய்வறிஞர் அரியானாவை சேர்ந்த முனைவர் தேவேந்திர் சர்மாவின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.


தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் மு.தமிழ்மணி, செந்தமிழ் மரபு வேளாண்மை நடுவம் கவிஞர் சிலம்புச்செல்வி, தாளாண்மை உழவர் இயக்க க.வே.நடராசன், பழமலை மரபுவழி வேளாண் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோட்டேரி சிவக்குமார் மற்றும் க.சரவணன், ஈரோடு மாவீரன், பேராசிரியர் சௌ.காமராசு, சீர்காழி பொற்கொடி சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 


காரைக்கால் பாஸ்கரின் மரபு விதைக் களஞ்சியம், தமிழர் மரபு உணவுத் திருவிழா, அடுப்பில்லா சமையல் செயல் விளக்கம், இயற்கை எரிவளி (பயோ கேஸ்) செயல் விளக்கம் ஆகியவை மாநாட்டில் இடம்பெற்றன. செ. கணேசன் நன்றியுரையாற்றினார். மாநாட்டு நிகழ்ச்சிகளை மா.மணிமாறன், சி. பிரகாசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 


மாநாட்டில் தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், வேளாண் விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச இலாப விலையை அடிப்படை விலையாக அறிவித்து சட்டமியற்ற வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தியும் தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் உள்ளதை பின்பற்றி தமிழ்நாட்டில் உழவர்களுக்கு ஏக்கருக்கு 12,000 ரூபாய் வீதம் நேரடி வருவாய்த் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


மாநாட்டில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உழவர்களும், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.


பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன், "உயிர்ம வேளாண்மை மாநாட்டின் நோக்கம் நமக்கு அண்டை மாநிலமாக  இருக்கின்ற ஆந்திரா, கேரளா அரசுகளை போல தமிழ்நாடு அரசும் உயிர்மை வேளாண்மையை பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும், இயற்கை வேளாண்மையில் விளையக்கூடிய விளைபொருள்களுக்கு, லாபகரமான விலை கிடைக்க சிறப்பு ஏற்பாடு செய்யவும் வேண்டுமென்பதற்கான சிறப்பு கொள்கையை அறிவிக்க வேண்டும், இயற்கை வேளாண்மையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும். அச்சட்டம் செயல்படுவதற்கு வாரியம் அமைக்க வேண்டும். ஒன்றிய அளவில் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்" எனக் கூறினார்.

 
ஆந்திர பிரதேச வேளாண் அறிவியலாளர் இராமாஞ்சநேயலு கூறும்போது, "ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள உழவர்களை திரட்டி இயற்கை வேளாண்மை பயிற்சி கொடுத்து கிட்டத்தட்ட 2024லிருந்து 2026க்குள் எல்லா மாநிலங்களிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறுவது என்ற முறையில் திட்டமிடப்பட்டுள்ளது.  தெலுங்கானாவும் அதற்கான உதவி செய்து வருகிறார்கள். சிக்கிம் முற்றிலுமாக இயற்கை வேளாண்மை மாநிலமாக மாறி உள்ளது. இப்படி மாறுவதுதான் உழவர்கள் நஞ்சு இல்லாத உணவு, லாபகரமான விளைபொருளுக்கான விலை இதை நோக்கி நகர்ந்து வருகிறோம். இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக ஆந்திரா போன்ற அரசாங்கங்கள் ஆதரவு தருகிறார்கள். இது போதாது, இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும், நகர்புறத்தில் உள்ள நுகர்வோர்களை ஒரு கூட்டுறவாக உருவாக்கி, உழவர்களை நேரடியாக இணைப்பதற்கான வழிமுறையை செய்து வருகிறோம். மக்களுக்கு நஞ்சில்லாத உணவு கிடைக்கிறது. வேளாண்மை ஒரு லாபகரமான தொழிலாக உழவர்களுக்கு மாறுகிறது. இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும். இந்திய அரசாங்கமும் உதவி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நேரடியான வருமானம் என்பதை பரவலாக்க வேண்டும். இந்தக் கொள்கை அறிவிப்புகளை இந்திய அரசின் கொள்கை அறிவிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக உழவர்களை ஒன்றிணைக்கிறோம்"  என்றார்.


முன்னதாக உழவர் போராளி தூருவாசன் மற்றும் டெல்லி உழவர் போராட்ட ஈகியர் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரைப்பட பாடலாசிரியர் கவிபாஸ்கரின் கவிவீச்சும், பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக்குழுவினரின் பறை இசையும் நடைபெற்றன. மேலும் மரபு வழி வேளாண்மை, இயற்கை விவசாயம் குறித்த நூல்கள், மரபுவழி விதைகள், மரபு வழியிலான உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.