Skip to main content

விவசாயியை அடித்துக் கொலை செய்து சடலத்தை கரும்பு தோட்டத்தில் புதைத்த கும்பல்! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

farmer incident in namakkal district police investigation underway

 

ஆத்தூர் அருகே, வாரிசு இல்லாத சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில், விவசாயியை அடித்துக் கொலை செய்து, கரும்பு தோட்டத்தில் புதைத்த கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பு என்கிற சுப்ரமணி (வயது 74), விவசாயி. இவருக்குத் திருமணம் ஆகவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்துவந்தார். 

 

இவர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி திடீரென்று மாயமானார். நாமகிரிப்பேட்டையில் உள்ள சுப்ரமணியின் உறவினர் கனகம் என்பவர், சுப்ரமணியை கண்டுபிடித்துத் தரக்கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது. 

 

இதையடுத்து, நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூரில் சுப்ரமணிக்கு சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை விற்பனை செய்வதில் ஆத்தூரைச் சேர்ந்த சாராய வியாபாரி பெருமாள் (வயது 55) என்பவருடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்தான் கூட்டாளிகளுடன் சேர்ந்து சுப்ரமணியை அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும் என கனகம் புகாரில் கூறியிருந்தார். 

 

பின்னர் சம்பவ நடந்த இடம் ஆத்தூர் எல்லைக்குள் வருவதால், எஃப்.ஐ.ஆர். மட்டும் பதிவுசெய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தொடர் விசாரணை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. விவசாயி சுப்ரமணி தன்னுடைய நிலத்தை சாராய வியாபாரி பெருமாள் என்பவருக்கு 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருந்தார். இருதரப்புக்கும் பேரம் படிந்ததை அடுத்து, அந்த நிலத்தைக் கிரயம் செய்வதற்கு முன்பணமாக பெருமாள் 10 லட்சம் ரூபாயைக் சுப்ரமணிக்கு கொடுத்திருக்கிறார். 

farmer incident in namakkal district police investigation underway

 

இந்நிலையில், சுப்ரமணி திருமணமாகாதவர் என்பதும், அவருக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் இல்லை என்பதையும் அறிந்த பெருமாள் தரப்பு, அவரை கொலைசெய்துவிட்டு, நிலத்தை அபகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. 

 

இதையடுத்து பெருமாள், அவருடைய ஆதராளர்கள் ராமதாஸ் (வயது 27), அறிவழகன், விவசாயி சக்திவேல், முஸ்தபா, தினேஷ் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 7 பேரும் சுப்ரமணியை கொலைசெய்து, சிவகங்காபுரத்தைச் சேர்ந்த சக்திவேலுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் புதைத்துவிட்டது தெரியவந்தது. 

 

இதையடுத்து ஆத்தூர் காவல்துறையினர், ராமதாஸ், அறிவழகன் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு, சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்குக் காவல்துறையினர் சென்றனர். 

 

அவர்கள் கூறிய இடங்களில் எல்லாம் ஜேசிபி இயந்திர உதவியுடன் தோண்டிப் பார்த்தும் சடலம் கிடைக்கவில்லை. 60 அடி நீளம், 6 அடி ஆழம் வரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டிப் பார்த்தும் சடலம் புதைக்கப்பட்ட இடம் எதுவென்று சரியாகத் தெரியவில்லை. மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) அன்றும் சடலத்தைத் தேடும் பணிகள் நடந்தன. இதுவரை சடலமோ, எலும்புகளோ கூட கிடைக்கவில்லை. பிடிபட்ட நபர்கள், சடலத்தைப் புதைத்த இடத்தைத் துல்லியமாகக் கூறாததால் காவல்துறையினரும் சலிப்படைந்தனர். இதையடுத்து கைதான மூவரையும் காவல்துறையினர் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சிறையில் அடைத்தனர். 

 

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெருமாள், சக்திவேல், நரசிங்கபுரம் தினேஷ், ஓலப்பாடியைச் சேர்ந்த முஸ்தபா ஆகியோரைத் தேடிவந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை (டிச. 4) மாலையில் ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தினேஷும், ஓலப்பாடி முஸ்தபா ஆத்தூர் ஊரக காவல்நிலையத்திலும் சரணடைந்தனர். 

 

இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் இருவரையும் 2 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

 

மேலும், தலைமறைவாக உள்ள பெருமாள், தோட்டத்து உரிமையாளர் சக்திவேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.