Skip to main content

விவசாயியை அடித்துக் கொலை செய்து சடலத்தை கரும்பு தோட்டத்தில் புதைத்த கும்பல்! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

farmer incident in namakkal district police investigation underway

 

ஆத்தூர் அருகே, வாரிசு இல்லாத சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில், விவசாயியை அடித்துக் கொலை செய்து, கரும்பு தோட்டத்தில் புதைத்த கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பு என்கிற சுப்ரமணி (வயது 74), விவசாயி. இவருக்குத் திருமணம் ஆகவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்துவந்தார். 

 

இவர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி திடீரென்று மாயமானார். நாமகிரிப்பேட்டையில் உள்ள சுப்ரமணியின் உறவினர் கனகம் என்பவர், சுப்ரமணியை கண்டுபிடித்துத் தரக்கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது. 

 

இதையடுத்து, நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூரில் சுப்ரமணிக்கு சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை விற்பனை செய்வதில் ஆத்தூரைச் சேர்ந்த சாராய வியாபாரி பெருமாள் (வயது 55) என்பவருடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்தான் கூட்டாளிகளுடன் சேர்ந்து சுப்ரமணியை அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும் என கனகம் புகாரில் கூறியிருந்தார். 

 

பின்னர் சம்பவ நடந்த இடம் ஆத்தூர் எல்லைக்குள் வருவதால், எஃப்.ஐ.ஆர். மட்டும் பதிவுசெய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தொடர் விசாரணை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. விவசாயி சுப்ரமணி தன்னுடைய நிலத்தை சாராய வியாபாரி பெருமாள் என்பவருக்கு 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருந்தார். இருதரப்புக்கும் பேரம் படிந்ததை அடுத்து, அந்த நிலத்தைக் கிரயம் செய்வதற்கு முன்பணமாக பெருமாள் 10 லட்சம் ரூபாயைக் சுப்ரமணிக்கு கொடுத்திருக்கிறார். 

farmer incident in namakkal district police investigation underway

 

இந்நிலையில், சுப்ரமணி திருமணமாகாதவர் என்பதும், அவருக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் இல்லை என்பதையும் அறிந்த பெருமாள் தரப்பு, அவரை கொலைசெய்துவிட்டு, நிலத்தை அபகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. 

 

இதையடுத்து பெருமாள், அவருடைய ஆதராளர்கள் ராமதாஸ் (வயது 27), அறிவழகன், விவசாயி சக்திவேல், முஸ்தபா, தினேஷ் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 7 பேரும் சுப்ரமணியை கொலைசெய்து, சிவகங்காபுரத்தைச் சேர்ந்த சக்திவேலுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் புதைத்துவிட்டது தெரியவந்தது. 

 

இதையடுத்து ஆத்தூர் காவல்துறையினர், ராமதாஸ், அறிவழகன் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு, சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்குக் காவல்துறையினர் சென்றனர். 

 

அவர்கள் கூறிய இடங்களில் எல்லாம் ஜேசிபி இயந்திர உதவியுடன் தோண்டிப் பார்த்தும் சடலம் கிடைக்கவில்லை. 60 அடி நீளம், 6 அடி ஆழம் வரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டிப் பார்த்தும் சடலம் புதைக்கப்பட்ட இடம் எதுவென்று சரியாகத் தெரியவில்லை. மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) அன்றும் சடலத்தைத் தேடும் பணிகள் நடந்தன. இதுவரை சடலமோ, எலும்புகளோ கூட கிடைக்கவில்லை. பிடிபட்ட நபர்கள், சடலத்தைப் புதைத்த இடத்தைத் துல்லியமாகக் கூறாததால் காவல்துறையினரும் சலிப்படைந்தனர். இதையடுத்து கைதான மூவரையும் காவல்துறையினர் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சிறையில் அடைத்தனர். 

 

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெருமாள், சக்திவேல், நரசிங்கபுரம் தினேஷ், ஓலப்பாடியைச் சேர்ந்த முஸ்தபா ஆகியோரைத் தேடிவந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை (டிச. 4) மாலையில் ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தினேஷும், ஓலப்பாடி முஸ்தபா ஆத்தூர் ஊரக காவல்நிலையத்திலும் சரணடைந்தனர். 

 

இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் இருவரையும் 2 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

 

மேலும், தலைமறைவாக உள்ள பெருமாள், தோட்டத்து உரிமையாளர் சக்திவேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.