Skip to main content

புதுசு, புதுசாக.. தினுசு ... தினுசாக... -மக்கள் இழந்த 500 கோடி...! அதிர்ச்சித்தகவல் ...

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
cr

 

ஆடு கொடுக்கிறோம், கோழி கொடுக்கிறோம், ஈமு கோழி வளர்க்க கொடுக்கிறோம் என்று விதவிதமாக களத்தில் இறங்கி மக்களின் பண ஆசையை தூண்டி அவர்களிடம் இருக்கும் சொற்ப பணத்தையும் வசூலித்துக் கொண்டு கடையை இரவோடு இரவாக மூடிவிட்டு மாயமாகி விடுவது மோசடி கம்பெனிகளின் வழக்கம்.   அதில் பணம் கட்டி ஏமாறுவதும் நம் மக்களின் தொடர் வழக்கமாக உள்ளது.  அந்த வரிசையில் தங்க நகை நிறுவனம் என்ற பெயரில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் என மேற்கு மண்டலத்தில் கடையை விரித்து கல்லா கட்டிக் கொண்டு ஓடி விட்டது முல்லை ஜுவல்லரி என்ற ஒரு டூ பாக்கூர் கம்பெனி.

 

இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் பல மனுக்களை கொடுத்தனர். திடீரென  நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் திரண்டு வந்தது. அவர்களும்  மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் கண்ணீர் சிந்தினார்கள். 

 

நாங்களெல்லாம் ஒரு மோசடி கம்பெனியை நம்பி ஏமாந்து விட்டோம் என்ற அவர்கள் மேலும் "கோவையை தலைமையிடமாக கொண்டு முல்லை ஜுவல்லரி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இந்த ஜுவல்லரி கடையின் கிளை சேலம்,  ஈரோடு, திருப்பூர் என பல  மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது.  மூன்று மாத காலமாக இதன் கிளை அலுவலகம் ஈரோடு பஸ் நிலையம் அருகே இருந்தது. 


இந்த முல்லை ஜுவல்லரி நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார்கள். மாத தவணைத் திட்டம் ஒன்றையும் அறிவிப்பு செய்திருந்தார்கள். அதன் பேரில் அத்திட்டத்தில்  மாதம் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் அதற்கு 20 சதவீதம் வட்டி போட்டு மூன்று மாதம் முடிந்ததும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள்.

 

அதே போல மூன்று மாத தவணைத் திட்டம் ஆறு மாத கால  தவணைத் திட்டம் நகை சேமிப்பு திட்டம் என பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து இருந்தனர் இதனை நாங்கள்   நம்பினோம். அதில் பணம் கட்டினோம்.  ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலா ஒரு நபர் 20 ஆயிரம் முதல ரூ. 5 லட்சம் வரை செலுத்தியிருக்கிறோம். ஒரு லட்சத்திற்கு ஒரே மாதத்தில் இருபதாயிரம் கூடுதலாக கிடைக்கிறது என்ற ஆசை தான். 

 

ஆனால் அவரகள் கூறியபடி எங்களுக்கு திருப்பி  பணம் கொடுக்கவில்லை.  இது சம்பந்தமாக அந்த அலுவலகம் சென்று  கேட்டால் அப்போதைக்கு ஏதேதோ சொல்லி காலம் கடத்தி விட்டனர். ஆனால் இப்போது திடீரென கடையை மூடிவிட்டு ஓடிவிட்டார்கள். இதனால் நாங்கள் எல்லோரும் பல கோடிக்கணக்கான  பணத்தை இழந்து ஏமாந்து விட்டோம். ஆகவே  எங்களிடமிருந்து ஏமாற்றிய  பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பணம் திரும்ப கிடைக்குங்களா சார்..." என பரிதாபமாக கேட்டனர். 

 

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இருநூறு கோடி திருப்பூர், கோவை என பல ஊர் மக்கள் 500 கோடி ஏமாந்துள்ளனர்.   தங்கத்தின் மீது பணம் போட்டால் தங்கமாக திருப்பி வரவேண்டாம்.  போட்ட பணமே திரும்பி வராது என இது போன்ற மோசடி கம்பெனிகள் புதுசு.. புதுசாக... தினுசு ... தினுசாக கிளம்பியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.