Skip to main content

இங்கிலாந்து சர்வதேச போதைக் கடத்தல் மன்னன் தூத்துக்குடியில் சிக்கினார்..!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

England person trapped and arrested in tuticorin

 

இலங்கையில் முக்கியப் பொருட்களான விரளி மஞ்சள், பீடி இலை, மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்ததுள்ளது. 

 

அதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கடத்தல் வியாபாரிகள், தூத்துக்குடி கடல் மார்க்கமாக 120 நாட்டிகல் மைல் தொலைவிலிருக்கும் இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்திவருகிறார்கள். காரணம், இந்திய கரன்சியில் அங்கே அவர்களுக்கு நல்ல விலை கிடைப்பதுதான். அதனால்தான் விரளி மஞ்சள், பீடி இலை மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. அதே சமயம் இதே ரூட்டில் போதைப் பொருட்களும் கடத்தப்படுவதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதனை அறிந்த இந்தியக் கடலோரக் காவல் படை, தமிழக தூத்துக்குடி க்யூ பிரிவு மற்றும் தூத்துக்குடி மரைன் போலீசார் கடத்தல்காரர்களைக் கடத்தப்படும் பொருட்களோடு பலமுறை மடக்கியிருக்கிறார்கள்.

 

இந்தக் கடத்தல் தொழில் அதிகமாக நடப்பதால் மேற்கண்ட பாதுகாப்புப் படைகள் தங்களுடைய கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், தூத்துக்குடி க்யூ பிரிவு டி.எஸ்.பி. சந்திரகுமாருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டரான விஜய அனிதா தலைமையில் எஸ்.ஐ.களான ஜீவ மணி தர்மராஜ், வில்லியம் பென்ஜமின், செல்வகுமார் உள்ளிட்ட போலீசாரைக் கொண்ட தனிப்படையினர் தூத்துக்குடியின் திரேஸ்புரம் காலனியிலுள்ள முத்தரையர் பகுதியில் சந்தேகத்துக்குரிய ஒரு நபரை சுற்றி வளைத்திருக்கிறார்கள். அவரை க்யூ பிரிவு போலீசார் விசாரித்தபோது அவர் இங்கிலாந்திலுள்ள லிட்டில் ஹாம்ப்டன் ஏரியாவைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (47) என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவரிடமிருந்து இங்கிலாந்து மற்றும் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்கள் இரண்டு, ஐஃபோன்கள், ரூபாய் இரண்டு லட்சம், இலங்கை பணம் இரண்டாயிரம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் பணம் திர்ஹம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

 

மேலும், அவர் இந்தியாவில் வசிப்பதற்கான ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா என்ற ஐ.ஓ.சி. கார்டை பெற கோவாவில் மணிப்பூரைச் சேர்ந்த யாங் கரேலா வாஷூம் என்ற பழங்குடிப் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். கோவாவில் அவரோடு குடும்பம் நடத்தி, பிள்ளைகளும் உள்ளனவாம். கடந்த 2018ஆம் ஆண்டு ஜூனில் மும்பை, பரோடா, கோவா ஆகிய இடங்களில் 302 கிலோ மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதில் இந்தியாவைச் சேர்ந்த பனிரெண்டு பேர் இங்கிலாந்தைச் சேர்ந்த, தற்போது சிக்கிய ஜோனாதன் தோர்ன், ஜான் பிரேஸ்கன், வியட்நாமைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 15 பேரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குத் தூத்துக்குடியிலிருந்து இலங்கை வழியாக போதைப் பொருள்களைக் கடத்தி சர்வதேச ஏஜெண்ட்களுக்கு கைமாற்றுவதில் இவர் கில்லாடி என்கிறார் க்யூ பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் விஜய அனிதா.

 

வழக்கம்போல் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்துவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவாவிலிருந்து பெங்களூரு வந்த ஜோனாதன் தோர்ன், அங்கிருந்து காரில் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். இங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது சமயம்தான் இவர் க்யூ பிரிவு போலீசாரிடம் சிக்கியிருக்கிறார். மேலும், இவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய, இங்கிலாந்து பாஸ்போர்ட்கள் 2020ஆம் ஆண்டு புதிப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அது போலி என தெரியவந்திருக்கிறது. காரணம் 2020ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அனைத்து பாஸ்போர்ட்களும் இயங்கவில்லை என்பதுதான் போலியை உறுதிப்படுத்தியது.

 

போதைக் கடத்தலில் முக்கியப் புள்ளியான ஜோனாதன் தோர்ன் இலங்கை செல்ல படகு உரிமையாளர் ஒருவரை இடைத்தரகர் மூலம் சந்திக்க இருப்பதையும், மேலும் தூத்துக்குடியில் அவருக்குக் கடத்தல் தொழிலில் உதவியவர்கள் வேறு யாரும் இருக்கலாம் என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. அது பற்றியும் நாங்கள் விசாரித்துவருகிறோம் என்கிறார்கள் க்யூ பிரிவு போலீசார். கைது செய்யப்பட்ட ஜேனாதன் தோர்ன் தூத்துக்குடி மாஜிஸ்திரேட் ராஜ குமரேசன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்தான் வெளிநாடு தொடர்புடைய குற்றவாளிகளின் விசாரணை நடக்கும் என்பதால் நீதிபதி அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி க்யூ பிரிவு போலீசார் அவரை சென்னை புழல் சியைில் அடைத்துள்னர்.

 

மேலும், பிடிபட்ட ஜோனாதன் தோர்ன் மீது பல வழக்குகள் உள்ளன. இங்கிலாந்தில் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றிற்காக அவர் இந்தியாவிலிருப்பதாகத் தெரிந்து, அவரை பிடிப்பதற்காக கோவாவரை வந்திருக்கிறார்கள் இங்கிலாந்து போலீசார். இதனையறிந்த ஜோனாதன் தோர்ன் தப்பிக்கும் பொருட்டு இலங்கை செல்வதற்காகத் தூத்துக்குடி வந்தபோதுதான் க்யூ பிரிவு போலீசாரின் வலையில் சிக்கியுள்ளார்.

 

இங்கிலாந்து போலீசாரால் கோட்டைவிடப்பட்ட, வெளிநாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைக் கடத்தல் மன்னன் தூத்துக்குடியில் வளைக்கப்பட்டது பரபரப்புப் பேச்சாகியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.