Skip to main content

கல்வித்துறை பயிற்சி கூட்டம் - திடீர் அதிகாரிகளான அதிமுகவினர்!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கல்வித்துறை அலுவலகர்களுக்கான ஒருநாள் நிர்வாக பயிற்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக 5 மாவட்டங்களில் இருந்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஒன்றிய கல்வி அலுவலர்கள் மற்றும் குறிப்பிட்ட அளவு ஆசிரியர்கள் என 200க்கும் அதிமானோர் வருகை தந்துயிருந்தனர்.

 

 


மதயிம் 12.15 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்தார். கல்வித்துறை அலுவலர்கள் மத்தியில் பேசும்போது, நிறைய ஆசிரியர்கள் இடமாற்றம் வேண்டும் எனக் கேட்கிறீர்கள். அதுவும் தென்மாவட்டத்துக்கு கேட்கிறீர்கள். அங்கு 7 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளார்கள். வடமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும், அப்படி அதிகப்படுத்திவிட்டு இடமாறுதல் கேளுங்கள் நிச்சயம் செய்துதரப்படும்.
 

முதன்மை கல்வித்துறை அதிகாரிகளுக்கு தற்போது அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு உள்ள நெருக்கடிகள் தெரியும். ஒருகாலத்தில் கண்ணை மட்டும் விட்டுவிட்டு தோலை உரித்துவிடுங்கள் என பெற்றோர்கள் சொல்வார்கள். இப்போது அதட்டிக்கூட பேசமுடியாத நிலையில் உள்ளீர்கள் என்பது தெரியும். இதை சீர் செய்ய பெற்றோர் ஆசிரியர் கழகத்தை வலிமைப்படுத்துங்கள். சரியாக செயல்படாத பெற்றோர் ஆசிரியர் கழகத்தை செயல்படுத்தி பெற்றோர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துங்கள். ஆண்டுக்கு ஒருமுறை அவர்களுடன் சந்திப்பை மேற்கொள்ளுங்கள். இதற்கு என்ன உதவி வேண்டுமோ கேளுங்கள் செய்யப்படும்.
 

 

 

அதோடு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கார்கள் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படுகிறது. ஒன்றிய அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கார்கள்  வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதேபோல் கழிப்பறையை பள்ளிகளில் சுத்தம் செய்வது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. அந்த பிரச்சனையை போக்க சேவை அமைப்பு ஒன்றுடன் இணைந்து ஆயிரம் கழிவுநீர் வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் வருகைக்குப்பின் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றார். அதன்பின் கனவு ஆசிரியர்களாக தேர்வானவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், 10 ஆயிரத்துக்கான காசோலை 60 ஆசிரியர்களுக்கு வழங்கினார் அமைச்சர். அதோடு கல்விக்கு சேவை செய்தவர்களாக சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
 

 

 

இந்த பயிற்சி நிகழ்ச்சி மண்டல அளவிலான நிகழ்ச்சி. இந்த பயிற்சி நிகழ்ச்சி நடந்த அரங்கில் அதிமுகவினர் 300 பேர் உள்ளே நுழைந்து நாற்காலிகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். அமைச்சர் பேசும்போது கைதட்டி கொண்டாடினர். திடீரென அதிகாரிகளாகிவிட்ட அதிமுகவினரை பார்த்து பிற மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். வெளியே செல்லுங்கள் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தும் ஒருவரும் அதைக்கேட்கவில்லை. அமைச்சர்கள் வெளியே சென்றபின்னே அதிமுகவினர் இடத்தை காலி செய்தனர். எங்க மாவட்ட அதிமுகவினரே பரவாயில்லை போல என புலம்பினார்கள் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.