சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் (20/10/2021) நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கட்சியில் துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்குவது, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன்பின் மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராகத் துரை வையாபுரி நியமிக்கப்பட்டார்.
மதிமுக தலைமைக் கழகச் செயலாளராகத் துரை வையாபுரி பொறுப்பேற்ற நிலையில், மதிமுகவிலிருந்து அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் வே. ஈஸ்வரன் பதவி விலகினார். ''எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது'' எனக் கருத்து தெரிவித்த ஈஸ்வரன், ''மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லாத நிலையில் அதனைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன? துரை வைகோதான் மதிமுவை வழிநடத்த முடியும் எனக்கூறுவது ஏன்? காலம்தான் தலைவர்களை உருவாக்கியுள்ளது. ஆனால் மதிமுகவில் இந்த திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது'' எனவும் தெரிவித்தார். இது மதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ''துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். மாவட்டச் செயலாளர்கள் துரைக்கு பெரிய பதவியாக கொடுக்க வேண்டும் என வற்புறுத்த ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டத்திற்கு மத்தியில் தொண்டர்களின் விருப்பம் இப்படி இருக்கிறது, அவருக்கும் விருப்பம் வந்துவிட்டது. அந்த தகுதியும் இருக்கிறது. நன்கு பேசுகிறார். நான் எதிர்பார்க்கவில்லை. எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் வாக்கெடுப்பு நடத்தி துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மதிமுகவினர் 99 சதவிகிதம் அவர் வர வேண்டும், பொறுப்பு வழங்க வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்றார்.