Skip to main content

மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாட்டம்; அலட்சியத்தால் கருவிலேயே இறந்த குழந்தை? 

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

Doctors birthday party took a life of an infant

 

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குத் திங்கள்கிழமை இரவு காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கூச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மனைவி இளவரசி பிரசவத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு காலை 4 மணிக்குத் தான் அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்று கூறியுள்ளனர். அப்போது வலியால் துடித்த இளவரசியை நீண்ட நேரத்திற்குப் பிறகு பரிசோதித்த போது  குழந்தை அசைவு இல்லை என்று கருதி அவசரமாக அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையில் பெண் குழந்தையை எடுத்துள்ளனர்.

 

இதனையறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்த உடனே சரியான சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றி இருக்கலாம் ஏற்கனவே பனிக்குடம் உடைந்த பெண்ணுக்குத் தாமத சிகிச்சையால் குழந்தை இறந்ததாக மருத்துவமனையில் நள்ளிரவில் பிரச்சனை செய்து மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த சிதம்பரம் காவல்துறையினர் மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ், மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அசோக் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இதுகுறித்து இளவரசியின் தாய் கூறுகையில், “காட்டுமன்னார்கோவில் அருகே ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் திங்கள் இரவு பரிசோதனை செய்தோம். அங்கு அவருக்குப் பனிக்குடம் உடைந்துவிட்டது. உடனடியாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டனர். அவசர ஊர்தியில் அழைத்து வந்தோம். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு காலை 4 மணிக்கு ஆப்ரேசன் எனக் கூறிவிட்டனர். வலி வந்து துடித்த போது செவிலியர்களிடம் கூறினோம். அவர்கள் உதாசினப்படுத்தி அலட்சியமாக எரிச்சல் அடைந்த நிலையில் பேசினார்கள். பின்னர் அவர்கள் இரவில் பிறந்தநாள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக்கொண்டு கொண்டாடினார்கள். திட்டினாலும் பரவாயில்லை என அந்த நேரத்தில் குழந்தை அசைவு இல்லை என்று கூறிய பிறகு தான் பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்தது தெரியவந்து. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையில் குழந்தையை எடுத்தனர். இதற்கு பணியிலிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களின் அலட்சியமும் அவர்களின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியதுமே காரணம்” எனக் குற்றம் சாட்டுகிறார்.

 

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவஅதிகாரி அசோக் பாஸ்கர் கூறுகையில், “இந்த மருத்துவமனையில் கரோனா காலகட்டத்தில்கூட பிரசவ வார்டு செயல்பட்டு மாதத்திற்கு 400-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவம் பார்த்து நல்லமுறையில் அனுப்பியுள்ளனர். ஆகஸ்டு மாதம் மட்டும் 459 பிரசவம் நடைபெற்றுள்ளது. இது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. பனிக்குடம் உடைந்து 24 மணி நேரம் சுகப்பிரசவத்திற்குக் காத்திருக்கலாம். மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்தபோது நல்லமுறையில் தாய் சேய் இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவ குழுவினரைக் கொண்டு விசாரணை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குழந்தை இறந்த ஆதங்கத்தில் கேக் வெட்டிய சம்பவத்தைத் தொடர்புப் படுத்துகிறார்கள். இதுகுறித்து விவரங்கள் விசாரணையில் தெரியவரும்” என்றார். 

 


சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது