Skip to main content

"மதியம் 12 முதல் 3 மணிவரை வெளியில் வர வேண்டாம்" -கடலூர் கலெக்டர் எச்சரிக்கை!

Published on 31/05/2020 | Edited on 31/05/2020
 "Do not come out until 12 noon" - Cuddalore Collector

 

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதேசமயம்  கடந்த இரண்டு வாரங்களாக நீடித்த கத்திரிவெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறையவில்லை.


இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-

"வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெயில் காலங்களில் லேசான ஆடைகள்,  உடலை இறுக்கிப் பிடிக்காத  தளர்வான ஆடைகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணிதல் வேண்டும்.  வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை, தொப்பி மற்றும் காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். மேலும் வெளியில் செல்லும் போது தவறாமல் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும்.

வெளியிடங்களில்  காரமான மற்றும் ரெடிமேட் வகை உணவுகளை தவிர்த்து இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்ற குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். குளிர் பானங்களை கடைகளில் வாங்கி அருந்துவதை தவிர்த்து எலுமிச்சை சாறு,  மோர், அரிசி வடிநீர் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் பழச்சாறுகளை வீட்டிலேயே தயாரித்து அவற்றை பருக வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்தை ஆவியாக்கும் மது,  தேநீர் மற்றும் மென்பானங்கள் போன்றவற்றை பருகுவதை தவிர்க்க வேண்டும்.  அதேபோல் நாள்பட்ட உணவு,  அதிக புரதம் கொண்ட மாமிசம்,  கொழுப்பு சத்துள்ள கார வகை உணவுகள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.  

 

அதிகமான வெயிலால் மயக்கம் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுமாயின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.  கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பணிபுரியும்  பெண்களின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். கால்நடைகளை நிழலான பகுதியில் கட்டி வைத்திருக்கவேண்டும். கால்நடைகளுக்கு அவ்வப்போது பருகுவதற்கு தாகம் தீர்க்க போதுமான அளவு தண்ணீரை வைக்க வேண்டும்.

சமையல் செய்யக்கூடிய இடத்தில் உள்ள கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து வெளிக்காற்று சுலபமாக வீட்டுக்குள் வரும்படி செய்ய வேண்டும்.  அதேபோல் இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்திருக்கலாம்.  அவ்வப்போது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக  பொதுமக்கள் அதிக வெப்பம் தாக்கக்கூடிய மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலான நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் அந்த நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதையும் சமையல் செய்வதையும் தவிர்த்தல் நல்லது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.