Skip to main content

முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

dmk MP's bail plea dismissed court order

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த கடலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்- க்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டுவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி, கடந்த செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி தொழிற்சாலை உரிமையாளரும், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, ரமேஷின் உதவியாளர்கள் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார். நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்ட ரமேஷை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், கடந்த அக்டோபர் 13- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தனர். பின்னர் கடலூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அக்டோபர் 27- ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.

 

இந்த நிலையில் ஜாமீன் கேட்டு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ரமேஷ் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் (22/11/2021) வந்த நிலையில், அக்டோபர் 23- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நீதிபதிகள் முன்னிலையில் நேற்று (23/10/2021) விசாரணைக்கு வந்தது.  அப்போது, ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவராஜ், " நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரமேஷ் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப் பதிந்தும் ஓடி ஒளியாமல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கில் அவருக்கு தொடர்புள்ளதாக ஆதாரம் இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கோரினார்.

 

ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன், "இந்த வழக்கு தொடர்பாக 43 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவிந்தராஜ் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமாகியுள்ளது. எனவே விசாரணை பாதிக்கும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என்று ஆட்சேபம் தெரிவித்தார். அதேபோன்று கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் தரப்பு வழக்கறிஞர்களும், ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜவஹர் உத்தரவிட்டார்.

 

இதனிடையே ரமேஷின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேருக்கு நேற்று முன்தினம் (22/10/2021) நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஐந்து பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க இரண்டு நாட்கள் அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்த மனு நேற்று (23/10/2021) நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர்களை ஒரு நாள் மட்டும் விசாரணைக்கு அனுமதி வழங்கி இன்று (24/10/2021) பகல் 12.30 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர் (எ) சுந்தர்ராஜ், வினோத் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நேற்று (23/10/2021) பகல் 12 30 மணியளவில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், விசாரணையை நேற்று இரவே சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் முடித்த நிலையில், அன்று இரவே நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் நவம்பர் 2- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.