Skip to main content

மீண்டும் அனலடிக்கும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி!  பெண் ஊழியர்கள் போர்க்கொடி!

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
nirmala devi

 

 

பேராசிரியை நிர்மலாதேவி பணிபுரிந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் மீண்டும் ஒரு விவகாரம் வெடித்திருக்கிறது. தனலட்சுமி என்பவர் கடந்த  13 வருடங்களாக அந்தக் கல்லூரியில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.  தன்னைப் பணியில் நிரந்தரமாக்குவதற்காக ரூ.5 லட்சத்தை அக்கல்லூரியின் செயலாளர் ராமசாமியிடம் கொடுத்ததாகவும், சொன்னபடி அவர் நடந்துகொள்ளாமல், புதிதாக வந்தவர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு, போஸ்டிங் போட்டுவிட்டதாக புகார் வாசிக்கிறார் அவர்.   இதேரீதியில், மகாதேவி என்பவரும் புலம்புகிறார். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, கல்லூரி வராண்டாவில் இன்று உட்கார்ந்துவிட்டார் தனலட்சுமி.  அவரோடு சேர்ந்து கொண்டனர் மகாதேவியும் உறவினர்கள் இருவரும். 



முதலில் நிர்மலாதேவியின் பெயரைக் குறிப்பிட்ட தனலட்சுமி “எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை அவங்க பொண்டாட்டி பிள்ளைகளுக்கு போட்டுக் கொடுத்திருக்காங்க. இது எந்த விதத்தில் நியாயம்?   போஸ்டிங் போடலைன்னா, காலேஜ் பேரை அசிங்கப்படுத்திருவேன்.” என்று குமுறலாகச் சொன்னார். 


பழைய கமிட்டி மெம்பர்கள் ராமசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், கல்லூரி முதல்வர் பாண்டியராஜன் “தேர்வுக் கட்டணம் என்ற பெயரில் மாணவர்களிடம் வசூலித்த ரூ.36 லட்சத்தை தன்னுடைய வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டார் செயலாளர் ராமசாமி. இன்றுவரையிலும், அந்தப் பணத்தை எடுத்துத்தரவில்லை.” என்று குற்றம் சாட்டுகிறார். 


கல்லூரியின் செயலாளர் ராமசாமியோ “போஸ்டிங்குக்கு யாரிடமும் நான் பணம் வாங்கவில்லை. தேவையில்லாமல் என் மீது பழிபோடுறாங்க.  சிலருடைய தூண்டுதல்ல இவங்க பிரச்சனை பண்ணுறாங்க.” என்றார். நிர்வாகக் குளறுபடிகளால் கல்லூரியின் பெயர் மேலும் கெடுகிறது என்று வருத்தப்படுகிறது மாணவர்கள் தரப்பு. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

ddd

 

 

ddd

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

இந்தநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள். அப்போது, அடுத்த மாதம் 4 -ஆம் தேதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி காஞ்சனா, அன்றைய தினம் மூன்று மாணவிகளிடம் சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

 

 

 

Next Story

நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜர்! பூட்டிய அறையில் கல்லூரி செயலரிடம் குறுக்கு விசாரணை!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் சாட்சியாக உள்ள தேவாங்கர் கல்லூரி செயலர் ராமசாமி ஆகியோர் இன்று (12/03/2020) ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 

PROFESSOR NIRMALA DEVI COURT COLLEGE SECRETARY INVESTIGATION

காலை 10.30 மணிக்கு பூட்டிய அறையில் தொடங்கிய விசாரணை,  உணவு இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்தது. மாலை 05.30 மணி வரை நீடித்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தபோது, கல்லூரி செயலர் ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். 
 

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய ராமசாமி,  வயதின் காரணமாகவோ என்னவோ, மிகவும் களைப்புடன் காணப்பட்டார். வரும் 27- ஆம் தேதி மூவரும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றும் இதே ரீதியில் பூட்டிய அறையில் காலை முதல் மாலை வரை விசாரணை நடைபெறும் என்றார், இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர்.