Skip to main content

"திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்!"- வேளாண் இணை இயக்குனரின் வேண்டுகோள்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

cuddalore district agricultural deputy director statement

குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "வேளாண்மையில் ரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாடு அதிகரித்து வருவதால் மண்வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க விவசாயிகள் தொடர்ந்து உயிர் உரங்களைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தை மீண்டும் வளமாக்க வேண்டும். இதன் மூலம் நஞ்சற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தியை பெருக்க முடியும். 

 

குறைந்த செலவில் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப அங்கக இடு பொருட்களான திரவ உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து மண் வளம் பாதுகாக்கப்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். இதனால் ரசாயன உரங்களின் இறக்குமதியும் பயன்பாடும் குறையும். உயிர் உரங்கள் நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உண்டாக்குகிறது. பயிர்களுக்கு வறட்சியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது. தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்கள் 25% சேமிக்கப்படுகிறது.

 

மாசற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்துகிறது. இயற்கை வழி பண்ணையம் ஊக்குவிக்கப்படுகிறது. மகசூல் 15% முதல் 20% வரை அதிகரிக்கிறது.

 

கடலூர் உயிர் உர உற்பத்தி மையத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம், பயிர்வகைகள் மற்றும் மணிலாவுக்கு ரைசோபியம், அனைத்து பயிர்களுக்குமான பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோஸம் உள்ளிட்ட எட்டு வகையான உயிர் உரங்கள்,  ஆண்டுக்கு 50,000 லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் தனியாரை விட குறைந்த விலையில் அதிக தரத்துடன் விநியோகம் செய்யப்படுகின்றன.

 

உலகத்திலேயே முதன் முறையாக திரவ உயிர் உர உற்பத்தியில் அதி நவீன தொழில்நுட்பமான நுண்ணிய குழாய் வடிவ உறைத்தொகுதி கொண்டு உயிர் உர பாக்டீரியாக்களை பிரித்து ஒரு மில்லி லிட்டர் திரவ உயிர் உரத்திற்கு 100 மில்லியன் பாக்டீரியாக்களை கொண்டதாக தயாரிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்கும் பொருட்களை சேர்த்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. திட உயிர் உரத்தை காட்டிலும் நூறு மடங்கு அதிக பாக்டீரியாக்களை கொண்டது. எடுத்துக்காட்டாக ஏக்கருக்கு 200 கிராம் கொண்ட 46 பொட்டலங்கள் கரும்பு பயிருக்கு உயிர் உரங்களை இடுவதால் கிட்டும் பயன், அதற்காகும் செலவான 276 ரூபாயில் திரவ உயிர் உரம் கொண்டு 112 ரூபாய் பெறலாம்.

 

ஆகவே, திரவ உயிர் உரங்கள் உயிர் உரங்களை காட்டிலும் நுண்ணுயிர் அளவு, காலாவதி காலம், செலவு, பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றில் மேம்பட்டதாக இருக்கும். ஆகவே குருவை, சொர்ணவாரி மற்றும் காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் திரவ உயிர் உரங்களை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.